ஆன்லைன் வாயிலாக ஆள்சேர்க்கும் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள்
ஆன்லைன் வாயிலாக ஆள்சேர்க்கும் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள்
ADDED : அக் 21, 2024 06:50 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள இளைஞர்களை, 'ஆன்லைன்' வாயிலாக மூளைச்சலவை செய்து தங்கள் அமைப்புகளில் சேர்க்கும் முயற்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஜம்மு - காஷ்மீரில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து, தங்கள் அமைப்புகளில் சேர்க்கும் பணியை, பாக்., பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றன.
இதனால், எல்லைகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும், தங்கள் முயற்சியை விடாத பயங்கரவாத அமைப்பினர் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக தங்கள் துாது நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த முயற்சியும் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவுப் பிரிவும், அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆட்சேர்ப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் உள்ள வேலையில்லா இளைஞர்களை குறிவைத்து சமூக வலைதளங்கள் வாயிலாக ஆள்சேர்ப்பு பணியில் அந்நாட்டு உளவுப் பிரிவும், பயங்கரவாத அமைப்புகளும் 'செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக 'எக்ஸ், பேஸ்புக், வாட்ஸ் ஆப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம்' போன்ற செயலிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
போலி கணக்குகள் துவங்கி, அதிக சம்பளத்துடன் வேலை வழங்குவதாக ஆசை காட்டி அப்பாவி இளைஞர்களை சேர்க்கும் பயங்கரவாத அமைப்புகள், பின் தனியாக குழு ஒன்றை துவங்கி அதில் நம் பாதுகாப்பு படையினர் தொடர்பான போலி வீடியோக்களை பதிவிடுகின்றனர்.
இந்திய ராணுவ வீரர்கள் அட்டூழியம் செய்வதாக நம்பத்தகுந்த வகையில் வீடியோக்களை வெளியிட்டு, இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். இதற்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யும் உடந்தையாக உள்ளது. அவர்கள் சொல்வதை நம்பி பலரும் அதில் சேர்வதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.