பயங்கரவாதிகளுக்கு பாக்., நேரடி நிதியுதவி அம்பலம்! சர்வதேச நிதி கண்காணிப்பு குழு அறிக்கை
பயங்கரவாதிகளுக்கு பாக்., நேரடி நிதியுதவி அம்பலம்! சர்வதேச நிதி கண்காணிப்பு குழு அறிக்கை
ADDED : ஜூலை 10, 2025 01:42 AM

புதுடில்லி: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஹவாலா, கிரிப்டோ என்.ஜி.ஓ.,க்கள், டிஜிட்டல் தளங்கள் வாயிலாக நிதி உதவி கிடைப்பதற்கு, அந்நாட்டு அரசே உதவுவதாக சர்வதேச நிதி கண்காணிப்பு குழு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு நிதி அளிப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கடந்த 2022ம் ஆண்டு, 'கிரே லிஸ்ட்' எனப்படும் சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம் சார்பாக, 'எப்.ஏ.டி.எப்.,' எனப்படும் 'சர்வதேச நிதி கண்காணிப்பு குழு' என்ற அமைப்புக்கு மூன்று முறை கடிதம் அனுப்பப்பட்டது.
இது, 'ஜி 7' கூட்டமைப்பு நாடுகளின் முயற்சியால் நிறுவப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பானது, சர்வதேச அளவில் பண மோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதை கண்காணிக்கும். இந்நிலையில், பாகிஸ்தானில் லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஸ் -இ -முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஹவாலா, கிரிப்டோ, என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா நிறுவனங்கள் போன்றவை வாயிலாக நிதியுதவி கிடைப்பதாக, எப்.ஏ.டி.எப்., தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் தெஹ்ரிக்- இ- - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட, லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஸ் -இ -முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் சட்ட விரோதமாக நிதி திரட்டுகின்றன. ஹவாலா, கிரிப்டோ, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக பணம் பெறப்படுகிறது. மேலும், 'ஜிகாத்' நிதியுதவியை, என்.ஜி.ஓ.,க்கள் வழியாக பெறுவதற்கு அந்நாட்டு அரசே உதவுகிறது.
நிதி திரட்டுவதற்காக போலி நிறுவனங்கள், இயற்கை வளங்களை கடத்துதல், மிரட்டி பணம் பறித்தல், ஆயுத கடத்தல் என பல்வேறு வழிகளை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்துகின்றன. தெஹ்ரிக்- இ- தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு, பழங்குடி இனத்தவர் பகுதிகளை சுரண்டுகிறது. நெட்வொர்க் இல்லாத எல்லையோர பகுதி மற்றும் கிராமங்களுக்கு, ஹவாலா முறையில் பணம் செல்கிறது.
காஷ்மீர் தொடர்பான பிரசாரம் மற்றும் நிதி திரட்டலுக்கு, அரசு உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். தெற்காசியாவின் மற்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்த, ரகசிய பரிவர்த்தனை மற்றும் கிரிப்டோ கரன்சிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். பயங்கரவாதிகளை பொறுத்துக் கொண்டு, அவர்களை ஆதரிக்கும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.