பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தல்: காங்., வேட்பாளர் தேர்வில் புகைச்சல்
பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தல்: காங்., வேட்பாளர் தேர்வில் புகைச்சல்
ADDED : அக் 16, 2024 10:11 PM

பாலக்காடு : பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தலில், காங்., வேட்பாளர் தேர்வில், கட்சிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. கட்சியின், சமூக ஊடகப்பிரிவு கன்வினர் சரின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பாலக்காடு தொகுதி காங்., எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில், லோக்சபா தேர்தலில் வடகரை தொகுதி எம்.பி.,யானார். இதையடுத்து, வரும், நவ., 13ம் தேதி பாலக்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இடைத்தேர்தலில் போட்டியிட, காங்., வேட்பாளராக ராகுல் மாங்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலக்காட்டில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், காங்., கட்சியின் சமூக ஊடகப்பிரிவு கன்வினர் சரின் கூறியதாவது:
பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தலில், ராகுல் மாங்கூட்டத்தை வேட்பாளராக தேர்வு செய்ததை, கட்சி தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், ஹரியானா தேர்தலில் நடந்தது போல், இங்கும் நடக்கும். பாலக்காட்டில் நடந்த விவாதங்கள் அனைத்தும் கேலிக்கூத்தாக உள்ளது.
கட்சி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால், தோற்பது ராகுல் மாங்கூட்டம் அல்ல, ராகுல் காந்தியாகும். காங்., தலைமை உணர்வின்றி செயல்படுகிறது. இன்ஸ்டாகிராமில் 'ஸ்டோரி' மற்றும் 'ரீல்ஸ்' போட்டு 'ஸ்டார்' ஆயிட்டோம் என நினைப்பது தவறு. கட்சிக்காக தியாகம் செய்திருக்க வேண்டும். கட்சியின் சமூக ஊடக பொறுப்புகளில் இருந்து நான் விலகவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.