ADDED : மார் 20, 2025 02:25 AM

மூணாறு:இடுக்கி மாவட்டம் வாகமண்ணில் சர்வதேச அளவிலான 'பாராகிளைடிங்' திருவிழா நேற்று துவங்கியது.
கேரள சுற்றுலாதுறையின் கீழ் செயல்படும் கேரள சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்கம், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு, இந்தியா ஏரோ கிளப், ஆரஞ்ச் லைப் பாராகிளைடிங் பள்ளி ஆகியோரின் தொழில் நுட்ப உதவியுடன் விழா நடக்கிறது.
அதனை கேரள சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்க அதிகாரி பினு குரியாகோஸ் நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழாவில் ஆறு பிரிவுகளில் பாராகிளைடிங் சாகச போட்டிகளும் நடக்கின்றன. வெற்றி பெறுவோருக்கு முதல்பரிசு ரூ.1.5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 15 வெளி நாடுகளைச் சேர்ந்த 15 போட்டியாளர்கள் உட்பட 49 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். மார்ச் 23ல் விழா நிறைவு பெறுகிறது.
வாகமண்ணில் இருந்து 4 கி.மீ., தொலைவில் கோலாகலமேட்டில் உள்ள அட்வஞ்சர் பூங்காவில் பாராகிளைடிங் திருவிழா மற்றும் போட்டிகள் நடக்கின்றன.