பதக்கம் தான் இல்லை; பாரீஸ் மக்களை வென்றார்; பாராட்டு மழையில் ஷீத்தல் தேவி!
பதக்கம் தான் இல்லை; பாரீஸ் மக்களை வென்றார்; பாராட்டு மழையில் ஷீத்தல் தேவி!
ADDED : செப் 02, 2024 09:28 AM

பாரீஸ்: பாராலிம்பிக் தொடரில் இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவியின் அசாத்திய திறமைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பாரீஸில் நடந்து வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரையில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப்பட்டியலில் 27வது இடத்தில் உள்ளது.
வில்வித்தை
இந்த நிலையில், வில்வித்தை போட்டியில் இந்தியாவின் சார்பில் 17 வயது சிறுமி ஷீத்தல் தேவி கலந்து கொண்டார். பிறந்தது முதலே இரு கைகளை இழந்த அவர், தனது கால்கள் மூலமாக, வில்வித்தை போட்டியில் சிறந்து விளங்கி வருகிறார்.
தோல்வி
நேற்று நடந்த வில்வித்தை போட்டியில் கைகள் இல்லாமல் பங்கேற்ற ஒரே வீராங்கனை இவர் தான். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் சிலியின் மரியானா ஜுனிகாவிடம் தோல்வியடைந்து, காலிறுதியின் முந்தைய சுற்றோடு வெளியேறினார்.
அசத்தல்
முதல்முறையாக பாராலிம்பிக்கில் பங்கேற்ற ஷீத்தல் தேவி, தான் எய்த முதல் இரு அம்புகளிலேயே உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றார். முதல் இரு வாய்ப்புகளிலேயே முழு புள்ளிகளான 10க்கு 10ஐ பெற்று எதிரணியினரையே வியப்புக்குள்ளாக்கினார். தொடர்ந்து, நடைபெற்ற அடுத்தடுத்து சுற்றுகளிலும் அசாத்தியமாக செயல்பட்டார். அவரை திறமையை பார்த்து அங்கிருந்தவர்களே கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். பதக்கம் வெல்லாமல் விட்டாலும் பாரீஸில் அனைவரது மனங்களையும் ஷீத்தல் தேவி வென்று விட்டார் என விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி பொங்க கூறினர்.
நம்பிக்கை
தனிநபர் பிரிவில் ஷீத்தல் தேவி தோல்வியைச் சந்தித்து இருந்தாலும், கலப்பு இரட்டையர் பிரிவில் ராகேஷ் குமாருடன் பங்கேற்க இருப்பதால், நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.