மணமான வாலிபருடன் பெண் ஓட்டம் 'லவ் ஜிகாத்' என பெற்றோர் புகார்
மணமான வாலிபருடன் பெண் ஓட்டம் 'லவ் ஜிகாத்' என பெற்றோர் புகார்
ADDED : ஜன 31, 2024 05:26 AM
கதக் : திருமணம் ஆன முஸ்லிம் வாலிபருடன், வேறு மதத்தை சேர்ந்த இளம்பெண் ஓட்டம் பிடித்துள்ளார். மகளை 'லவ் ஜிகாத்' செய்ய முயற்சிப்பதாக, பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கதக் பெட்டகேரியில் வசித்தவர் அமீர் குகனுார், 30. இவருக்கு திருமணமாகிவிட்டது. ஒரு குழந்தை உள்ளது. அமீருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் வேறு மதத்தை சேர்ந்த, தம்பதியின் மகளான 19 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.
அமீருக்கு திருமணம் ஆனது தெரிந்தும், இளம்பெண், அவரது காதல் வலையில் விழுந்து உள்ளார்.
கடந்த 16ம் தேதி அமீரும், இளம்பெண்ணும் ஓட்டம் பிடித்தனர். மகளை அமீர் கடத்திச் சென்றதாக கூறி, பெட்டகேரி போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் செய்து உள்ளனர். ஆனால் இளம்பெண் மாயமாகிவிட்டதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மகளை மீட்டுத் தரும்படி, இளம்பெண்ணின் பெற்றோர் தினமும் போலீஸ் நிலையம் சென்று விசாரிக்கின்றனர். 'வாடகைக்கு ஒரு காரை எடுத்துக் கொடுங்கள்; உங்கள் மகளை தேடுகிறோம்' என, போலீசார் அலட்சியமாக பதில் சொல்லி உள்ளனர்.
மனம் உடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், இரண்டு நாட்களுக்கு முன்பு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றினார்.
இளம்பெண்ணின் பெற்றோர் கூறுகையில், 'அமீர், எங்கள் மகளுடன் சகோதரர் போல பழகி, காதல் வலையில் வீழ்த்தினார். மகளை கடத்திச் சென்று 'லவ் ஜிகாத்' எனும் காதல் பெயரில் வேறு மத இளம்பெண்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். எங்கள் மகளை எங்களிடம் மீட்டு வர வேண்டும். போலீசார் எங்களுக்கு உதவவில்லை' என்றனர்.