'கிரீமிலேயர்' வருமான உச்சவரம்பை உயர்த்த பார்லி., குழு பரிந்துரை
'கிரீமிலேயர்' வருமான உச்சவரம்பை உயர்த்த பார்லி., குழு பரிந்துரை
ADDED : ஆக 09, 2025 04:34 AM

புதுடில்லி: 'இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனை கருத்தில் வைத்து, 'கிரீமிலேயர்' வருமான உச்சவரம்பில் திருத்தம் செய்வது காலத்தின் தேவை' என, பார்லிமென்ட் குழு பரிந்துரைத்துள்ளது.
ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையில் மேம்பட்டு இருந்தால், 'கிரீமிலேயர்' என்று அழைக்கப்படுகின்றனர். அரசு வேலை, கல்வி உள்ளிட்ட சில இடஒதுக்கீடுகளை அவர்கள் பெற முடியாது.
ஆய்வு இந்த கிரீமிலேயர் பிரிவில் உள்ளோருக்கான வருமான உச்ச வரம்பை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஆய்வு செய்வது வழக்கம். கடந்த 2017ல் 6.5 லட்சம் ரூபாயாக இருந்த ஆண்டு வருமான உச்ச வரம்பு, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்பின் இது உயர்த்தப்படவில்லை.
இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோர் நலனை காக்கும் வகையில், பா.ஜ., - எம்.பி., கணேஷ் சிங் தலைமையிலான பார்லிமென்ட் குழு இதை ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின்படி எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பற்றிய அறிக்கையை, பார்லிமென்டில் இக்குழு நேற்று தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனை காக்கும் வகையில், தற்போது வழங்கப்படும் கிரீமிலேயர் உச்சவரம்பு மிகவும் குறைவு. இதன் வாயிலாக குறிப்பிட்ட அளவிலான மக்கள் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். எனவே, தற்போதுள்ள பணவீக்கம் மற்றும் வருமான உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, கிரீமிலேயர் உச்சவரம்பை அதிகரிப்பது காலத்தின் தேவை.
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இந்த உச்சவரம்பை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் இந்த உச்சவரம்பை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கவில்லை; சமூக பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து, இந்த உச்சவரம்பை உயர்த்துவது அவசியம்.
பாதிக்கப்படுவர் தற்போதைய கிரீமிலேயர் உச்சவரம்பில், குறைந்த எண்ணிக்கையிலான இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயனடைய முடியும். அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 2021 - 22ல் 58.6 லட்சமாக இருந்த நிலையில், 2023 - 24ல் 20.29 லட்சமாக குறைந்துள்ளன.
எனவே, கிரீமிலேயர் உச்சவரம்பை அவ்வப்போது மாறுதலுக்கு உட்படுத்துவது அவசியம்; அவ்வாறு இல்லை எனில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.