பார்லிமென்ட்டுக்கே உயரதிகாரம்; துணை ஜனாதிபதி திட்டவட்டம்
பார்லிமென்ட்டுக்கே உயரதிகாரம்; துணை ஜனாதிபதி திட்டவட்டம்
ADDED : ஏப் 22, 2025 02:10 PM

புதுடில்லி: பார்லிமென்ட்டுக்கே உச்ச அதிகாரம் இருப்பதாக டில்லி பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டில்லி பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட பார்லிமென்ட் தான் உயர் அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் எவரும் இல்லை:
இரு வெவ்வேறு வழக்குகளில் (கோரக்நாத் வழக்கு மற்றும் கேசவானந்த் பாரதி) அரசியலமைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் இரு விதமான கருத்துக்களை கூறுகிறது. நமது மவுனம் ரொம்ப ஆபத்தானது. சிந்திக்கும் எண்ணம் கொண்டவர்கள் நமது பாரம்பரியத்தை பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தையோ, தனிநபரையோ களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது.
ஜனநாயகத்திற்கு ஏற்படும் இடையூறுகளை எப்படி பொறுத்து கொள்ள முடியும். பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னையாகிறது. இதனை நாம் ஒடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், தற்போது பார்லிமென்ட்டுக்கே உயரதிகாரம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.