ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு; 198 பேர் எதிர்ப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு; 198 பேர் எதிர்ப்பு
UPDATED : டிச 17, 2024 02:11 PM
ADDED : டிச 17, 2024 12:15 PM

புதுடில்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா லோக்சபாவில் இன்று (டிச.,17) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவினர் அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். மார்ச் மாதத்தில் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியம் என்றும், துவக்கத்தில் அதை பல கட்டங்களாக செயல்படுத்தலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், இதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூன்று சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டது. மசோதாவுக்கு, கடந்த 12ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இன்று (டிச.,17) லோக்சபாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப லோக்சபாவில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கூட்டுக்குழுவுக்கு அனுப்ப 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லோக்சபாவில் நடந்த மின்னணு ஓட்டெடுப்பை அடுத்து மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது. குளிர்கால கூட்டத் தொடர், டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.