பிப்.,1 ஞாயிறன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: உறுதி செய்தது பார்லி., விவகார குழு
பிப்.,1 ஞாயிறன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: உறுதி செய்தது பார்லி., விவகார குழு
UPDATED : ஜன 10, 2026 01:40 AM
ADDED : ஜன 10, 2026 01:14 AM

புதுடில்லி: வரும் 2026-27ம் ஆண்டுக்கான, மத்திய பட்ஜெட், ஞாயிற்றுக்கிழமை எனினும், பிப்.1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பார்லி. விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, எதிர்வரும் பட்ஜெட் கூட்ட தொடருக்கான தேதிகளை முன் மொழிந்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி உரை, ஜன. 28ல் இடம்பெறும். பொருளாதார அறிக்கை, பார்லி.யில் வரும் 29ம் தேதி சமர்ப்பிக்கப்படும்.
பிப்.1 அன்று பட்ஜெட் தாக்கலாகும். சமீபத்திய வரலாற்றில் மத்திய பட்ஜெட், ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக தனது 9வது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
கடந்த 2017 முதல் துவங்கி பிப்.1 அன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்வது தொடர்ந்து வருகிறது. முன்பு இது, பிப்.28 ஆக இருந்தது. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதவியில் இருந்தபோது, புதிய நிதியாண்டு துவங்கியவுடன் பட்ஜெட்டில் கூறப்பட்ட அம்சங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காக, போதிய கால அவகாசத்துக்காக புதிய நடைமுறையை கொண்டு வந்தார்.
கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் பிப்.28ல், சனிக்கிழமைகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஞாயிற்றுக்கிழமை இதுவரை தாக்கல் ஆனதில்லை.
ஞாயிறன்று பங்குச்சந்தை இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக தேசிய பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை இதுகுறித்து ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பங்குச் சந்தைகள் இயங்கியுள்ளன என்பதால் முதலீட்டாளர்களின் ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளது.

