பார்லி., கடிதம், ஆவணங்கள் எம்.பி.,க்களுக்கு இனி தாய்மொழியில்! லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
பார்லி., கடிதம், ஆவணங்கள் எம்.பி.,க்களுக்கு இனி தாய்மொழியில்! லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
UPDATED : ஜன 13, 2026 05:38 AM
ADDED : ஜன 13, 2026 12:51 AM

“பார்லி., நடவடிக்கைகள் அனைத்தும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், அரசியலமைப்பு சட்ட அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இதனால் கடிதங்கள், ஆவணங்கள் என முக்கியமான தகவல்கள், எம்.பி.,க்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே விரைவில் கிடைக்கும்,” என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று கூறியதாவது:
'காமன்வெல்த்' கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு, 16 ஆண்டுகளுக்கு பின் நம் நாட்டில் நடக்கிறது.
இந்த உச்சி மாநாட்டை, பழைய பார்லி., கட்டடத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மைய மண்டபத்தில், பிரதமர் மோடி வரும் 15ல் துவக்கி வைக்க உள்ளார். இந்த அமைப்பின் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் 16ல் நடக்கிறது.
இந்த மாநாட்டில், 21 நாடுகளின் சபாநாயகர்கள், அரசு நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும், 15 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில், கனடா, பிரிட்டன் உட்பட 42 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமே, பார்லி., நடவடிக்கைகளை, தற்போது இருப்பதை விட மேம்படுத்துவது எப்படி என்பது தான். இது குறித்து விரிவான உரையாடல்கள் நடக்கும்.
ஏ.ஐ., போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை, பார்லி., நடவடிக்கைகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதே இந்த மாநாட்டின் கருப்பொருள்.
பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடந்தாலும், அனைத்துமே நவீன தொழில்நுட்பங்கள் பற்றியும், அவற்றை பார்லி., நடவடிக்கைகளில் பயன்படுத்துவதும் பற்றியுமே இருக்கும்.
அந்த வகையில், நம் பார்லி., நடவடிக்கைகள் அனைத்தையும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அரசியலமைப்பு சட்ட அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.
இதனால், கடிதங்கள், ஆவணங்கள் என முக்கியமான தகவல்கள், விரைவில் எம்.பி.,க்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே கிடைக்கும். இதன் மூலம் எம்.பி.,க்கள் பயனடைவது மட்டுமின்றி, பொது மக்களும் பயனடைவர். ஒட்டுமொத்த பார்லி., நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

