ஆந்திராவில் அரிசி கடத்திய கப்பலை மடக்கி பிடித்த பவன் கல்யாண்
ஆந்திராவில் அரிசி கடத்திய கப்பலை மடக்கி பிடித்த பவன் கல்யாண்
ADDED : டிச 01, 2024 05:01 AM

அமராவதி: ஆந்திராவில் துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட அந்த மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், அரிசி கடத்தலில் ஈடுபட்ட கப்பலை பறிமுதல் செய்தார்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டி வரும் பவன் கல்யாண், அவ்வப்போது அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறார்.
இந்த சூழலில், துறைமுகம் வாயிலாக அரிசி கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, காக்கிநாடா துறைமுகத்தில் அவர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள கப்பல் வாயிலாக அரிசி கடத்தப்படுவதாக தனக்கு தகவல் வந்ததாக கூறி, கப்பலில் ஏறி சோதனை நடத்தினார். அதில், கடத்தல் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறுகையில், 'காக்கிநாடா துறைமுகத்தில் நடக்கும் அரிசி கடத்தலை தடுக்க வந்தேன். கடந்த ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழல் இன்னும் தொடர்கிறது.
இந்த துறைமுகம் அனைவருக்கும் இலவசம் போல தெரிகிறது. யாருக்கும் பொறுப்பு இல்லை' என, பதிவிட்டுள்ளார். ஆய்வு செய்தது தொடர்பான வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன், போதைப்பொருள் விவகாரத்தில் குற்றவாளிகளைத் தடுக்க ஆந்திர அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாநில உள்துறை அமைச்சரை பவன் கல்யாண் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.