ADDED : பிப் 01, 2024 11:19 PM

மும்பை,:மஹாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கு விசாரணைக்காக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் பேரனும், அக்கட்சியின் எம்.எல்.ஏ., வுமான ரோஹித் பவார், 38, அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று மீண்டும் ஆஜரானார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - பா.ஜ., - அஜித் பவாரின் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மாநில கூட்டுறவுத் துறையில் உள்ள சர்க்கரை ஆலைகளை முறைகேடாக விற்பனை செய்ததாக, 2019 ஆகஸ்டில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தவும் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பாக, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் பேரனும், கஜ்ரட் ஜாம்கேடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ரோஹித் பவாரிடம், கடந்த 20ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், நேற்று பிற்பகல் 1:05 மணி அளவில் ரோஹித் பவார் மீண்டும் ஆஜரானார்.
அவரிடம் விசாரணை நடத்தி, அதிகாரிகள் வாக்குமூலங்களை பெற்றனர். கடந்த 10 நாட்களில், ரோஹித் பவாரிடம் இரு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசியவாத காங்., தொண்டர்கள் அமலாக்கத் துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.