ADDED : பிப் 08, 2026 03:08 AM
டேராடூன்: உத்தரகண்டில் தகுதியற்ற, 1000க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பென்ஷன் பெற்று வந்தது கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கான பணபரிவர்த்தனையை அரசு நிறுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் குறித்து மத்திய கணக்கு தணிக்கை நிறுவனம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.
அதில், அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோர் தங்கள் துறை ஓய்வூதியத்துடன் சேர்த்து மூத்த குடிமக்கள் ஓய்வூதியம், சுதந்திரப் போராட்ட வீரர் ஓய்வூதியம் மற்றும் பிற சமூக நலத் துறை திட்டங்களிலும் பணம் பெற்றது தெரியவந்தது.இதையடுத்து தகுதி இல்லாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர். விசாரணை முடிந்த பின், பணத்தை மீட்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

