விலைவாசி உயர்வால் போராடும் மக்கள்; கும்பகர்ண தூக்கத்தில் மத்திய அரசு; ராகுல் குற்றச்சாட்டு
விலைவாசி உயர்வால் போராடும் மக்கள்; கும்பகர்ண தூக்கத்தில் மத்திய அரசு; ராகுல் குற்றச்சாட்டு
ADDED : டிச 24, 2024 02:06 PM

புதுடில்லி: விலைவாசி உயர்வால் மக்கள் போராடும் போது, மத்திய அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்னம் செய்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில், ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு, நான் உள்ளூர் காய்கறி சந்தைக்கு சென்றேன். அங்கு பணவீக்கம் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து விற்பனையாளர்களுடன் பேசினேன். மக்களின் கருத்துகளை கேட்டேன். விலைவாசி உயர்வால் மக்கள் போராடும் போது, மத்திய அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் 40 ரூபாய் இருந்த பூண்டு, இன்று ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலைவாசி உயர்வால் மக்கள் போராடி வருகின்றனர். அன்றாட தேவைக்கான சிறு விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். சந்தையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, இல்லத்தரசிகளின் பிரச்னைகளை நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டோம். வருமானம் எப்படித் தேக்கமடைகிறது, பணவீக்கம் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை உணர்ந்தேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
புல்லட் ரயில்
இதற்கிடையே, 'மோடி அரசு அறிவித்த புல்லட் ரயில் இன்னும் வரவில்லை, ஆனால் புல்லட் ரயிலின் வேகத்தை விட வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம், சாமானியர்களின் முதுகை உடைத்துவிட்டது' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.