தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மக்களின் நம்பிக்கையை பிழையானதாக அறிவிக்க முடியாது: சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

 மக்களின் நம்பிக்கையை பிழையானதாக அறிவிக்க முடியாது: சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

 மக்களின் நம்பிக்கையை பிழையானதாக அறிவிக்க முடியாது: சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்


ADDED : ஏப் 16, 2026 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 01:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-- டில்லி சிறப்பு நிருபர் -

சபரிமலை உட்பட வழிபாட்டுத் தலங்களில் பாலின சமத்துவ உரிமை மீறப்படுவதாக கூறி, தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 'மத விவகாரங்களில் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை தவறு என பிரகடனம் செய்வது சவாலான பணி' என, தெரிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரும் வழக்கைத் தொடர்ந்து, மத உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் தொடர் பான ஏழு முக்கிய சட்டக் கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

சிதைத்து விடும்


தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான இந்த அமர்வில், நேற்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வி முன்வைத்த வாதம்:

மதம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பின்பற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பு. அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவு தனிநபர் சுதந்திரத்தை வழங்கினாலும், அது ஒட்டுமொத்த சமூகத்தின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் இருக்கக்கூடாது.

ஒரு சமூகத்தின் நம்பிக்கை உண்மையானதாகவும், நடைமுறையில் உள்ளதாகவும் இருக்கும்பட்சத்தில், நீதிமன்றங்கள் அதை அங்கீகரிக்கக் கடமைப்பட்டுள்ளன. நீதிபதிகள் புறநிலைக் கண்ணோட்டத்தில், மத நடைமுறைகளை மதிப்பீடு செய்வது, அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளைச் சிதைத்துவிடும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நாகரத்னா மற்றும் ஜாய்மால்யா பக்சி ஆகியோர் குறுக்கிட்டு சில முக்கியமான கேள்விகளை எழுப்பினர்.

தலைமை நீதிபதி சூர்ய காந்த், ''மதத்திற்கு உள்ளேயே பாகுபாடுகள் இருந்தால், அதில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?'' என்று கேட்டார்.

நீதிபதி நாகரத்னா, ''அத்தியாவசிய மத நடைமுறைகள் எவை என்பதை தீர்மானிப்பது யார்? அதை நீதிமன்றங்கள் முடிவு செய்ய முடியாதா?'' என கேள்வி எழுப்பினார்.

நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ''மதச் சடங்கிற்கும், நிர்வாக நடவடிக்கைகளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வேண்டும்,'' என வினவினார்.

இதற்குப் பதிலளித்து சிங்வி முன்வைத்த வாதம்:

மத நம்பிக்கைகள் அல்லது அதன் நடைமுறைகளை ஆய்வு செய்வதற்கான முகாந்திரமாக பொதுநல வழக்குகளை மாற்ற அனுமதிக்கக் கூடாது. சாதாரண வழக்குகளை விட, மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதற்கான வரம்பு 10 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

அதிகாரம் இல்லை


மத நடைமுறை சார்ந்த சடங்குகளை, அதை பின்பற்றுவோரின் கண்ணோட்டத்தில் இருந்தே கூர்ந்து கவனிக்க வேண்டும். நெய் வாங்குவது, பஸ் ஏற்பாடு செய்வது போன்ற நிர்வாக அல்லது வணிக ரீதியான நடவடிக்கைகளை அரசு ஒழுங்குபடுத்தலாம். ஆனால், தெய்வத்தின் தன்மையையும், வழிபாட்டு முறையையும் அரசு நேரடியாக சீர்திருத்த முடியாது.

நாடு முழுதும் ஆயிரக்கணக்கான அய்யப்பன் கோவில்கள் இருக்கின்றன. அய்யப்பனை, 'நைஷ்டிக பிரம்மச்சாரி' வடிவத்தில் வழிபடும் ஒரே கோவில் சபரிமலை மட்டுமே. இந்த வழிபாட்டு முறையே அக்கோவிலின் அடிப்படை அடித்தளம். இதை மாற்ற முயற்சிப்பது மதத்தின் சாரத்தையே நீர்த்துப் போகச் செய்துவிடும்.

தவிர, சபரிமலையில் பெண்களுக்கான தடை என்பது பாலினத்தின் அடிப்படையிலான பாகுபாடு அல்ல. 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதிக்கப்படுவதே இதற்குச் சாட்சி. குறிப்பிட்ட வயது வரம்பு உள்ள பெண்களுக்கான கட்டுப்பாடு என்பது தெய்வத்தின், 'நைஷ்டிக பிரம்மச்சாரி' என்ற அடையாளத்துடன் நே ரடியாகத் தொடர்புடையது.

அரசு சீர்திருத்தங்கள் கொண்டு வரலாம் என்பதை ஒப்புக்கொண்டாலும், சமூக நலன் மற்றும் சுகாதாரம், பொது ஒழுங்கு ஆகிய காரணங்களுக்காக மட்டுமே, அதில் அரசு தலையிட முடியும். மத நடைமுறைகளை நேரடியாக ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை. அரசியல் சாசன நிர்ணய சபையில் அம்பேத்கர் முன்மொழிந்த சட்டப் பிரிவு 26-ன் சாரமும் இதுவே.

நரமாமிசம், நரபலி போன்ற தீவிரமான செயல்களுக்கும், பாரம்பரிய மதச் சடங்குகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கச் சீர்திருத்தங்கள் தேவையே. எனினும், அத்தியாவசிய வழிபாட்டு உரிமைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதாடினார்.

அவரது வாதத்தை ஏற்று, பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை தவறானது அல்லது பிழையானது என பிரகடனம் செய்வது என்பது நீதிமன்றத்திற்கு மிகுந்த சவாலான வேலை,'' என்றார்.

இன்றும் விசாரணை


''மத நம்பிக்கையுடன் தொடர்பு இல்லாதவர்கள், சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், தாக்கல் செய்யும் பொதுநல மனுக்கள், மதத்தின் அடிப்படையையே அசைத்து பார்க்கும். ஆகவே அத்தகைய மனுக்களை விசாரிக்கக் கூடாது ,'' என நீதிபதி நாகரத்னாவும் தெரிவித்தார்.

மற்றொரு நீதிபதியான எம்.எம்.சுந்தரேஷ், ''மதத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான பக்தர்களின் கருத்தை கேட்காமல், அந்த மத நடைமுறை குறித்து நீதிமன்றத்தால் முடிவு எடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து இவ் வழக்கு விசாரணை இன்றும் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us