எரிவாயு சப்ளை செய்யும் நாடுகளுடன் பேச்சு மூலம் தீர்வு 'மக்கள் நலனே முக்கியம்!' : ஜெய்சங்கர் விளக்கம்
எரிவாயு சப்ளை செய்யும் நாடுகளுடன் பேச்சு மூலம் தீர்வு 'மக்கள் நலனே முக்கியம்!' : ஜெய்சங்கர் விளக்கம்
UPDATED : மார் 10, 2026 12:08 AM
ADDED : மார் 09, 2026 11:33 PM

'மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் எண்ணெய் வினியோக தொடர் பாதிக்கப்பட்டு உள்ளது. எனினும், நாட்டு மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக, பல்வேறு தரப்பினரிடமும் பேச்சு நடத்தி நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். போர் நிலவரங்களை பிரதமர் நரேந்திர மோடி உன்னிப்பாக கவனித்து வருகிறார்,'' என, விலை உயர்வு தொடர்பாக பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
போர் பதற்றம் நீடிக்கிறது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுப்பதால் மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இதனால், நம் நாடு உட்பட உலகளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இந்நிலையில், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று துவங்கியது.
காலையில் ராஜ்யசபா கூடியதும், மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவும் சூழலில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து, விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படவே, கடும் அமளிக்கு மத்தியில், ஈரான் போர் குறித்து அறிக்கை தாக்கல் செய்து, பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பேசியதாவது:
ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர், மேற்காசிய நாடுகளை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பல நாடுகளையும் பாதித்துள்ளது; ஏராளமான உயிரிழப்புகளை இந்த போர் ஏற்படுத்தி உள்ளது.
பதற்றங்களை தணிக்க, பேச்சு
ஈரானில் உச்ச தலைவராக இருந்த கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இது, கவலைக்குரியது.
நம் நாட்டை பொறுத்தவரை, மேற்காசிய பிராந்தியத்தில் போர் ஏற்பட்ட உடனேயே, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த மோதல் குறித்து கவலை தெரிவித்து மத்திய அரசு அறிக்கையும் வெளியிட்டது. அமைதியை பேணும்படி இரு தரப்பிடமும் வலியுறுத்தப்பட்டது. பதற்றங்களை தணிக்க, பேச்சு மற்றும் துாதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
இந்த விவகாரத்தை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருகிறார். உரிய நேரங்களில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அவர் உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.
ஈரான் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு, அங்குள்ள துாதரகங்கள் மூலம் தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. நேற்று வரை, 67,000 இந்தியர்களை பத்திரமாக தாயகத்துக்கு அழைத்து வந்துள்ளோம்.
இந்த போரில், நம் நாட்டைச் சேர்ந்த வணிக கப்பல் மாலுமிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்; ஒருவர் மாயமாகி உள்ளார்.
நாட்டின் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. மேற்காசிய நாடுகள், நம் எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
நமக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகிக்கும் முக்கிய நிறுவனங்கள் அங்குள்ளன. தற்போதைய போரால், நம் நாட்டிற்கான எண்ணெய் வினியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசை பொறுத்தவரை, நாட்டு மக்களின் நலன் தான் முதன்மையான விஷயம். அதற்காக, பல்வேறு தரப்பினரிடமும் பேச்சு நடத்தி, நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
டெஹ்ரானில் உள்ள பல இந்திய மாணவர்கள், நம் துாதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வணிக நடவடிக்கைகளுக்காக ஈரான் சென்ற இந்தியர்கள், ஆர்மீனியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெஹ்ரானில் உள்ள நம் துாதரகம், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. இந்தியர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
அக்கறை இல்லை! எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லை. அவர்கள் சபையில் அராஜகத்தையும், கூச்சலையும் மட்டுமே உருவாக்க விரும்புகின்றனர். பல்வேறு விவாதங்களில் அமைச்சர்கள் பதிலளிக்கும் சமயத்தில், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வெளிநடப்பு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நட்டா மத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ.,
தோற்றுப்போன ராகுல்! எதிர்க்கட்சிகள் கேட்டதாலேயே லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்திற்கு அரசு தயாரானது. அதற்குள் இன்னொரு நோட்டீசை அளித்து, அதன் மீது விவாதம் நடத்தும்படி கேட்பது எப்படி நியாயம்? ராகுல் ஒரு தோல்வி அடைந்த எதிர்க்கட்சித் தலைவர். பீயூஷ் கோயல் மத்திய வர்த்தக அமைச்சர், பா.ஜ.,
- நமது டில்லி நிருபர் -

