துப்பாக்கி வைத்திருக்க அனுமதி; பி.எம்.டி.சி., ஊழியர்கள் கோரிக்கை
துப்பாக்கி வைத்திருக்க அனுமதி; பி.எம்.டி.சி., ஊழியர்கள் கோரிக்கை
ADDED : அக் 04, 2024 12:14 AM
பெங்களூரு : பி.எம்.டி.சி., நடத்துனர், கத்தி குத்துக்கு ஆளான சம்பவத்தால் பீதியில் உள்ள ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ள, அனுமதி கேட்கின்றனர்.
பெங்களூரின், ஒயிட்பீல்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஐ.டி.பி.எல்., பஸ் நிறுத்தத்தில், பி.எம்.டி.சி.,யின் வால்வோ பஸ்சில், இம்மாதம் 1ம் தேதி, நடத்துனர் யோகேஷுடன், ஜார்க்கண்டை சேர்ந்த பயணி ஹர்ஷா சின்ஹா தகராறு செய்து கத்தியால் குத்தினார்.
யோகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்த சம்பவத்தால், பி.எம்.டி.சி., நடத்துனர், ஓட்டுனர்கள் அச்சத்தில் உள்ளனர். தற்காப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி அளிக்கும்படி கோரி, பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் ராமசந்திராவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, பி.எம்.டி.சி.,யின் ஓட்டுனர் 'கம்' நடத்துனர் யோகேஷ் கவுடா எழுதிய கடிதம்:
பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடியில், பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தினம் 24 மணி நேரம், உயிரை பணயம் வைத்து பணியாற்றுகின்றனர்.
காற்று மாசுக்கு இடையே நடமாடுகின்றனர். மனதளவில் பாதிப்படைந்து உள்ளனர்.
தங்கள் குடும்பத்தினருடன் பொழுது போக்க முடிவதில்லை. ஆனால் வாகன பயணியர், பஸ்சில் பயணியருடன் சிறுசிறு விஷயங்களுக்கும் தகராறு செய்து, பி.எம்.டி.சி., ஓட்டுனர், நடத்துனர்களை தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
கடந்த 1ம் தேதி நடந்த சம்பவமே, இதற்கு உதாரணமாகும். எனவே ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தங்களின் தற்காப்புக்காக, துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

