காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; போலீசார் அதிரடி நடவடிக்கை
காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; போலீசார் அதிரடி நடவடிக்கை
ADDED : டிச 23, 2024 10:21 AM

சண்டிகர்: உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டுகள் வீசிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இந்நிலையில், இன்று (டிச.,23) உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தேடப்பட்டு வந்த, காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது குறித்து, பஞ்சாப் மாநில டி.ஜி.பி., கவுரவ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் ஆதரவளிக்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையை சேர்ந்த 3 பேரை உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள், பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் ஆவர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏ.கே., ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் இரண்டு பிஸ்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

