ADDED : டிச 31, 2025 04:53 AM
புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் பயணியை தாக்கிய, பணியில் இல்லாத விமானி ஒரு வாரத்துக்கு பின் கைது செய்யப்பட்டு உள்ளார்.
'டாடா' குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பைலட்டாக பணியாற்றுபவர் வீரேந்திர சேஜ்வால்.
கடந்த 19ம் தேதி மற்றொரு தனியார் விமானத்தில் பயணியாக சேஜ்வால் சென்றார்.
அதற்காக டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வரிசையில் சென்ற சேஜ்வால் மற்றொரு பயணியான அங்கித் திவானை முந்தி செல்ல முயன்றுள்ளார்.
இது தொடர்பாக பைலட் சேஜ்வாலுக்கும், அங்கித் திவானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேஜ்வால், திவானை தாக்கியுள்ளார். இதில் அவரது மூக்கு எலும்பில் காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக திவான் அளித்த புகாரின்படி, சேஜ்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில், விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவை போலீசார் ஆய்வு செய்ததில், திவானை சேஜ்வால் தாக்கியது உறுதியானது.
இதையடுத்து தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், பைலட் சேஜ்வாலை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

