விமானம் நடுவானில் குலுங்கிய சம்பவம்; விமானி போதையில் இருந்தது அம்பலம்
விமானம் நடுவானில் குலுங்கிய சம்பவம்; விமானி போதையில் இருந்தது அம்பலம்
UPDATED : ஆக 11, 2026 07:58 PM
ADDED : ஆக 11, 2026 06:01 PM

புதுடில்லி: நடுவானில் விமானம் குலுங்கிய சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி 'ஏர் இந்தியா' சிஇஓ.,வுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
'ஏர் இந்தியா'வின், 'ஏஐ2379' பயணியர் விமானம் கடந்த 4ம் தேதி தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கெத்தில் இருந்து டில்லிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 1 மணிநேரத்தில் திடீரென நடுவானில் பறக்கும்போதே குலுங்கியது; ஓரிரு வினாடிகளில் 300 அடிக்கு கீழிறங்கியது. இந்த சம்பவத்தால் 17 பயணியர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விமான விபத்து விசாரணை அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. அவர்களது விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அந்த அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, 'ஆட்டோ பைலட்' எனப்படும், விமானத்தை தானாக இயக்கும் தொழில்நுட்பம் திடீரென செயலிழந்தது. இதையடுத்து, விமானத்தை துணை விமானி கைகளால் இயக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். தொடர்ந்து, விமான கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறுகள் ஏற்பட்டதற்கான எச்சரிக்கை வந்தது.
விமானத்தில் இருந்த பல்வேறு குறியீட்டு விளக்குகளின் சுவிட்சுகளும் சிறிது நேரம் செயலிழந்தன. இதனுடன், பல்வேறு தொழில்நுட்ப மற்றும் இயந்திர கோளாறுகளும் ஏற்பட்டன. சுழல் காற்றின் காரணமாக விமானம் அலைபாய்ந்தது.
மேலும், விமானத்தின் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இயந்திர பாகங்களை இயக்குவதில் ஹைட்ராலிக் அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய விமானம் பிரான்சில் தயாரிக்கப்பட்டது என்பதால், அந்நாட்டு விமான விபத்து விசாரணை அமைப்பான பி.இ.ஏ., மற்றும் விமான தயாரிப்பு நிறுவனமான, 'ஏர்பஸ்' ஆகியவையும் விசாரணையில் இணைய உள்ளன.
இதற்கிடையே, விபத்து குறித்து விசாரணை நடத்த, ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சனுக்கு, விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.
