தனியார் பயிற்சி விமானம் விபத்து; மஹா.வில் விமானி உயிர் தப்பினார்
தனியார் பயிற்சி விமானம் விபத்து; மஹா.வில் விமானி உயிர் தப்பினார்
UPDATED : மே 13, 2026 10:16 PM
ADDED : மே 13, 2026 08:50 PM

புனே:மஹாராஷ்டிராவின் பாராமதி விமான தளம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கிய தனியார் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான தளம் அருகே, 'ரெட்பேர்டு' விமான பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் விமானி ஒருவர் நேற்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானத்தை பாராமதி அருகேயுள்ள கோஜூபாவி கிராமத்தில் விமானி தரையிறக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பத்தில் மோதிய விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்து பற்றி அறிந்து வந்த போலீசார் அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, 'வி.எஸ்.ஆர்., வென்சர்ஸ்' என்ற தனியார் நிறுவன விமானம் கடந்த ஜன.,28ல் பாராமதிக்கு சென்றபோது விமான நிலையம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த அப்போதைய மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் உட்பட ஐந்து பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
