sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ.,வுக்கு எதிராக தனி அமைப்பு துவங்க திட்டம்!: அதிருப்தி 'தலை'கள் ஈஸ்வரப்பா, எத்னால் அதிரடி

/

பா.ஜ.,வுக்கு எதிராக தனி அமைப்பு துவங்க திட்டம்!: அதிருப்தி 'தலை'கள் ஈஸ்வரப்பா, எத்னால் அதிரடி

பா.ஜ.,வுக்கு எதிராக தனி அமைப்பு துவங்க திட்டம்!: அதிருப்தி 'தலை'கள் ஈஸ்வரப்பா, எத்னால் அதிரடி

பா.ஜ.,வுக்கு எதிராக தனி அமைப்பு துவங்க திட்டம்!: அதிருப்தி 'தலை'கள் ஈஸ்வரப்பா, எத்னால் அதிரடி


ADDED : செப் 24, 2024 07:20 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பா.ஜ., தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில், ராயண்ணா, சென்னம்மா பிரிகேட் - ஆர்.சி.பி., என்ற பெயரில் தனி அமைப்பை துவங்க, அதிருப்தி 'தலை'வர்கள் ஈஸ்வரப்பா, பசனகவுடா எத்னால் தயாராகின்றனர். இதுகுறித்து, அக்டோபர் 20ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளது.

கர்நாடக பா.ஜ.,வில் மூத்த தலைவர்கள் எடியூரப்பா, ஈஸ்வரப்பா இடையே எப்போதும் ஒருங்கிணைப்பு இருந்தது இல்லை. இவர்கள் சமகாலத்து தலைவர்கள். சைக்கிளில் சுற்றி வந்து கட்சியை வளர்த்தவர்கள். ஆனால் எடியூரப்பாவை போன்று, ஈஸ்வப்பாவால் முக்கிய பதவிகளில் அமர முடியவில்லை.

ஒரு முறையாவது முதல்வராக வேண்டும் என்பது, அவரது கனவு. ஆனால் அது இதுவரை நிறைவேறவே இல்லை.

எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் முக்கியத்துவம் அளிப்பதாக, ஈஸ்வரப்பா நீண்ட காலமாகவே எரிச்சலில் இருந்தார். ஒரே கட்சியில் இருந்தாலும், எலியும், பூனையுமாகவே இருந்தனர்.

இதற்கு முன்பு ஈஸ்வரப்பா, ராயண்ணா பிரிகேட் என்ற அமைப்பு உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம், குருபர் சமுதாயத்தினரை ஒருங்கிணைத்து, தன் சக்தியை நிரூபிக்கவும், எடியூரப்பாவுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தவும் முயற்சித்தார்.

இதனால் கடுப்படைந்த எடியூரப்பா, மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார். ராயண்ணா பிரிகேட் அமைப்பை முடக்குவதில் வெற்றியும் பெற்றார். இது இரண்டு தலைவர்களுக்கும் இடையேயான புகைச்சலை அதிகப்படுத்தியது.

அடுத்து வந்த 2023 சட்டசபை தேர்தலில் போட்டியிட ஈஸ்வரப்பாவுக்கு வாய்ப்பும் மறுக்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் ஹாவேரி தொகுதியில் மகனுக்கு சீட் கேட்டார். அதுவும் வழங்கப்படவில்லை. பசவராஜ் பொம்மைக்கு கிடைத்தது.

கோபமடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொகா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவுக்கு எதிராக, சுயேச்சையாக போட்டியிட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தேர்தலில் தோற்ற ஈஸ்வரப்பா, மீண்டும் பா.ஜ.,வில் இணைய தயாராகிறார். இதற்காக ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் மூலமாக முயற்சிக்கிறார் என, தகவல் வெளியானது. இதற்கிடையில் மீண்டும் ராயண்ணா பிரிகேட் அமைப்புக்கு உயிர் கொடுக்க அவர் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விஷயத்தில் ஈஸ்வரப்பாவுடன், விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும் கைகோர்த்துள்ளார். எடியூரப்பாவுக்கு இவரும் எதிராளி.

மாநிலத் தலைவர் பதவியை எத்னால் ஆர்வத்துடன் எதிர்பார்த்தார். ஆனால் தன்னை விட மிகவும் இளையவரான விஜயேந்திராவுக்கு அது கிடைத்ததை எத்னாலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

வாய்ப்பு கிடைக்கும்போது, எடியுரப்பா குடும்பத்தினரை பகிரங்கமாகவே வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார். தந்தை, பிள்ளைகளின் பிடியில் இருந்து, கட்சியை மீட்கப்போவதாக சூளுரைக்கிறார்.

ராயண்ணா, சென்னம்மா பிரிகேட் என்ற அமைப்பை உருவாக்க ஈஸ்வரப்பாவும் எத்னாலும் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, இரண்டு தலைவர்களும் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வரும் அக்டோபர் 20ல் பாகல்கோட்டில் அடுத்த ஆலோசனை நடக்கவுள்ளது. இதில் குருபர் மற்றும் லிங்காயத் சமுதாயத்தின் தலா பத்து தலைவர்கள், 25 மடாதிபதிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது. அதே நாளில் ஆர்.சி.பி., அமைப்பு குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக, பஞ்சமசாலி சமுதாயத்துக்கு 2ஏ இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் ஜெய மிருதுஞ்செய சுவாமிகளும், ஈஸ்வரப்பா, எத்னாலுடன் இணைந்துள்ளார்.

ஆர்.சி.பி., அமைப்பின் மூலம், குருபர், லிங்காயத் சமுதாத்தினரை ஒன்று சேர்த்து, பா.ஜ., தலைவர்களுக்கு தங்கள் சக்தியை காண்பிக்க வேண்டும் என்பது, இரு தலைவர்களின் நோக்கம்.

ஷிவமொகாவில் ஈஸ்வரப்பா அளித்த பேட்டி:

எனக்கும், எத்னாலுக்கும் ஹூப்பள்ளியில் ராயண்ணா விருது கொடுத்து கவுரவித்தனர். ஜமகன்டியின், ஜக்கனுரில் சங்கொல்லி ராயண்ணா பிரிகேட் அமைப்பு ஏற்படுத்துவது குறித்து, ஆலோசனை நடத்தினோம். அப்போது எத்னால், என்னை முதல்வராக்குவதாக கூறினார். அவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

ராயண்ணாவும், சென்னம்மாவும் ஒன்றாக ரத்தத்தை பகிர்ந்து கொண்டு பிறந்தவர்கள். நானும், எத்னாலும் சேர்ந்து ராயண்ணா, சென்னம்மா பிரிகேட் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, மிருதுஞ்செயா சுவாமிகள் கூறியுள்ளார். இதுகுறித்து அக்டோபர் 20ல், பாகல்கோட்டில் ஆலோசனை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடன் ரமேஷ் ஜார்கிஹோளி இருக்கிறார். நாங்கள் அனைத்து சமுதாயங்களுடனும், ஒருங்கிணைந்து செல்கிறோம். ஈஸ்வரப்பாவுக்கு அநியாயம் நடந்திருக்கலாம். நாங்கள் அவரை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு அடுத்து, முக்கியமான தலைவர் ஈஸ்வரப்பா. இவருக்கு அநியாயம் செய்தது யார் என்பது, ஊடகத்தினருக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். ஈஸ்வரப்பாவை மீண்டும் கட்சிக்கு அழைத்து வருவோம். அவரை முதல்வராக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

பசனகவுடா பாட்டீல் எத்னால்

விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ.,






      Dinamalar
      Follow us