அரசின் திட்டங்களில் தாமதம் கூடாது: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
அரசின் திட்டங்களில் தாமதம் கூடாது: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
UPDATED : ஜூன் 25, 2025 10:38 PM
ADDED : ஜூன் 25, 2025 10:30 PM

புதுடில்லி: '' பொது மக்கள் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த திட்டங்களில் ஏற்படும் தாமதம் அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துவதுடன், மக்கள் பலன்பெறுவதை தடுக்கும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் ஒருங்கிணைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மூத்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுரங்கம், ரயில்வே மற்றும் நீர்வளத்துறை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு செய்தார். பொருளாதார வளர்ச்சிக்கும் மற்றும் பொது மக்கள் நலனுக்கும் இந்த திட்டம் இன்றியமையாதது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்கள் முடிக்க வேண்டும் என ஆலோசனையின் போது பிரதமர் அறிவுறுத்தினார்.
இந்த திட்டங்களில் ஏற்படும் தாமதம் என்பது, அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துவதுடன், உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதில் தாமதம் ஏற்படும் எனக்கூறினார். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மத்திய மாநில அரசு அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
மேலும் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் குறித்து ஆய்வு செய்த மோடி, அனைத்து மாநிலங்களும், லட்சிய மாவட்டங்கள், தொலைதூர, பழங்குடி மற்றும் எல்லைப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுபடுத்த வேண்டும். ஏழைகள், ஒதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கும் தரமான சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெறச் செய்வதற்கான நடைமுறைகளையும் பிரதமர் ஆய்வு செய்தார். இதற்காக பணியாற்றிய பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநிலங்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், உள்நாட்டில் திறன்களுடன் செயல்படுத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தன்னம்பிக்கையை முன்னேற்றுவதற்கான ஒரு சக்திவாய்ந்த சான்றாக அமைந்துள்ளது. பாதுகாப்பு துறையில் தேசம் தன்னிறைவு பெறுவதற்கான வாய்ப்பை மாநில அரசுகள்பயன்படுத்திகொள்ள வேண்டும் என பிரதமர் கூறினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.