இது கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்: ராமர் கோவில் கொடியேற்ற விழாவில் மோடி பேச்சு
இது கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்: ராமர் கோவில் கொடியேற்ற விழாவில் மோடி பேச்சு
UPDATED : நவ 25, 2025 02:27 PM
ADDED : நவ 25, 2025 01:08 PM

அயோத்தி: அயோத்தியில் இன்று காவிக்கொடி ஏற்றியது வரலாற்று சிறப்பு மிக்க தருணம். இது கொடி அல்ல, இந்தியாவின் கலாசார அடையாளம் என பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழா முன்னிட்டு ஒட்டு மொத்த தேசமும், உலகமும் ராமரின் பக்தியிலும், உணர்விலும் மூழ்கி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ராம பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அயோத்தியில் இன்று காவி கொடி ஏற்றியது வரலாற்று சிறப்பு மிக்கது. இது கொடி அல்ல, இந்தியாவின் கலாசார அடையாளம்.
ஒற்றுமை, தெய்வீகம்
வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது. இந்த காவிக்கொடி ஒற்றுமையையும், தெய்வீகத்தையும் விளக்குகிறது. உலகம் முழுவதும் ராமர் உணர்வு பரவி கிடக்கிறது. அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வை கண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் போது, சப்த மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று அயோத்தி மீண்டும் உலகிற்கு ஒரு முன் மாதிரியாக அமையும் நகரமாக மாறி வருகிறது.
இதுதான் முக்கியம்
21ம் நூற்றாண்டின் அயோத்தி மனிதகுலத்திற்கு புதிய வளர்ச்சியை வழங்கி வருகிறது. இப்போது அயோத்தி வளர்ச்சி அடைந்து வரும் மாற்றம் இந்தியாவிற்கு முதுகெலும்பாக திகழ்கிறது. ராமர் நம்முடன் இணைவது உணர்ச்சிகள் வாயிலாக தான், வேறுபாடுகள் மூலம் கிடையாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவருக்கு ஒரு நபரின் பரம்பரை முக்கியம் கிடையாது. அவர்களின் பக்தி தான் முக்கியம். ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
2047க்குள்...!
கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடை ந்துள்ளனர். நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மோகன் பகவத் பேச்சு
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: உலகிற்கு அமைதியையும் செழிப்பையும் பரப்பிய ராமராஜ்யத்தின் கொடி, இன்று அயோத்தி கோயிலின் உச்சியில் மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது. கோவிலைக் கட்ட எவ்வளவு காலம் ஆனது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த கோயிலின் கட்டுமானப் பணி 500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு நிறைவேறியுள்ளது.
ராமர் கோவிலுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் ஆன்மாக்கள் இன்று அமைதியடைந்திருக்க வேண்டும். கொடியின் காவி நிறம் தர்மத்தைக் குறிக்கிறது. கொடி எப்போதும் ஒரு சின்னம். ராமர் கோவிலில் அத்தகைய உயர்ந்த கொடியை நிறுவுவதற்கு கோவில் கட்டுமானத்தைப் போலவே கணிசமான நேரம் எடுத்தது. பலர் இந்த நாளை கனவு கண்டனர். இத்தகைய கனவை நனவாக்கும் வகையில் ராம ராஜ்ஜிய கொடி இன்று ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

