ஜெர்மனி அதிபருடன் இணைந்து பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி
ஜெர்மனி அதிபருடன் இணைந்து பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி
UPDATED : ஜன 12, 2026 12:01 PM
ADDED : ஜன 12, 2026 11:53 AM

ஆமதாபாத்: குஜராத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில், பிரதமர் மோடியும், ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸும் ஹனுமன் உருவப்படம் பொறித்த பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.
2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இன்று இந்தியா வந்தடைந்தார். அவர் தனது இந்திய சுற்றுப்பயணத்தை ஆமதாபாத்தில் தொடங்கினார். பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து சிறிது நேரம் உரையாடினர். பின்னர் இருவரும் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று, காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். வரலாற்று சிறப்புமிக்க ஆசிரமத்தில் இரு தலைவர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சர்வதேச பட்டம் விடும் விழாவைத் தொடங்கி வைக்க சபர்மதி ஆற்றங்கரைக்குச் சென்ற தலைவர்கள் இருவரும், அங்கு நடந்த கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். பிரதமர் மோடியும், ஜெர்மனி அதிபரும் ஹனுமன் உருவப்படம் பொறித்த பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து காந்தி நகரில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இடையிலான இருநாட்டு உறவுகள் குறித்த கலந்துரையாடல் இன்று நடக்க உள்ளது. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், சர்வதேச அளவில் நிலவி வரும் பிரச்னை குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

