அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: செப்., 23ல் ஐ.நா., சபையில் உரை நிகழ்த்துகிறார்!
அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: செப்., 23ல் ஐ.நா., சபையில் உரை நிகழ்த்துகிறார்!
UPDATED : செப் 17, 2024 10:29 PM
ADDED : செப் 17, 2024 10:26 PM

புதுடில்லி: அமெரிக்காவில் நடக்கும் குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 21ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும். அடுத்த ஆண்டு இந்த மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
அடுத்த நாள், நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி உரையாற்ற உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.
அடுத்த நாள் செப்.,23ம் தேதியன்று, எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த பயணத்தின் போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

