ராமர் கோயில் கனவை நிஜமாக்கினார் பிரதமர் மோடி: அமித்ஷா பெருமிதம்
ராமர் கோயில் கனவை நிஜமாக்கினார் பிரதமர் மோடி: அமித்ஷா பெருமிதம்
ADDED : பிப் 10, 2024 03:27 PM

புதுடில்லி: ‛‛ கனவாக இருந்த ராமர் கோயிலை, பிரதமர் மோடி நிஜமாக்கினார் '' என லோக்சபாவில் ராமர் கோயில் தொடர்பாக நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
லோக்சபாவில் ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் கும்பாபிஷேகம் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை பா.ஜ., எம்.பி., சத்யபால் சிங் துவக்கி வைத்து பேசினார். பல கட்சி எம்.பி.,க்கள் இந்த விவாதம் மீது பேசினர்.
இதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவாதத்தின் மீது பேசியதாவது: ராமர் கோயில் இயக்கத்தை புறக்கணித்து நாட்டின் வரலாற்றை யாரும் படிக்க முடியாது. 1528 முதல் ஒவ்வொரு தலைமுறையும் இந்த இயக்கத்தை ஏதோ ஒரு வடிவில் பார்த்தது. ராமர் கோயில் என்பது கனவாக இருந்தது. ஆனால், அதனை மோடி அரசு நிஜமாக்கியது.
ஆயிரக்கணக்கான வரலாற்றில் ஜன.,22 முக்கிய இடம் பெறும். சிறந்த இந்தியாவிற்கான துவக்க நாளாக அமைந்துள்ளது. கோயிலுக்காக 1528 முதல் நடந்த போராட்டத்தையும், 1858 முதல் நடந்த சட்டப் போராட்டத்தையும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் முடித்து வைத்தது.
ராமர் கோயில் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காட்டியது. வேறு எங்கும் பெரும்பான்மை சமூகம் தனது நம்பிக்கைக்காக இவ்வளவு காலம் சட்டப்பூர்வமாக போராடியது இல்லை. ராமர் கோயில் கட்டுமானம் என்பது போராட்டத்தில் இருந்து பக்திக்கான பயணமாக இருந்தது.
ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நாங்கள் துணை நிற்போம் என பிரதமர் மோடியும் பா.ஜ.,வும் உறுதியுடன் தெரிவித்தனர். பிரதமர் மோடி 11 நாட்களாக ராம பக்தியில் மூழ்கினார். ராமர் கோயில் குறித்து மக்களிடம் அத்வானி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மோடி நிஜமாக்கினார். மோடி இல்லாவிட்டால் ராமர் கோயில் கட்டுமானம் சாத்தியம் ஆகியிருக்காது. அமைதியான முறையில் கோயில் கட்டப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்தில் அரசியல் முழக்கம் இல்லை. அயோத்தி விமான நிலையத்திற்கு பல பெயர்களை சூட்ட பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், துறவி வால்மீகி பெயரை பிரதமர் தேர்வு செய்தார். அனைத்து சமூக மக்களையும் பிரதமர் அழைத்து செல்கிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
ஒவைஸி கேள்வி
இந்த விவாதத்தின் மீது ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைஸி பேசியதாவது: மோடி அரசு குறிப்பிட்ட ஒரு மதத்திற்கானதா? அல்லது ஒட்டு மொத்த நாட்டிற்கானதா? இந்திய அரசுக்கு எந்த மதமும் உள்ளதா? இந்த நாட்டிற்கு என மதம் ஏதும் இல்லை என நான் கருதுகிறேன். நாட்டில் உள்ள 17 கோடி முஸ்லீம்களுக்கு என்ன மாதிரியான செய்தியை அனுப்புகிறீர்கள்? நான் என்ன பாபர், ஜின்னா அல்லது அவுரங்கசிப்பின் செய்தித்தொடர்பாளரா? நான் கடவுள் ராமரை மதிக்கிறேன். ஆனால், கோட்சேவை வெறுக்கிறேன். ஏனென்றால், கடைசியாக ‛ ஹே ராம் ' என சொன்னவரை சொன்னவர் அவர். இவ்வாறு அவர் பேசினார்.