பிராயசித்தம் தேடி பிரதமர் மோடி தியானம் : கபில் சிபல் விமர்சனம்
பிராயசித்தம் தேடி பிரதமர் மோடி தியானம் : கபில் சிபல் விமர்சனம்
ADDED : மே 30, 2024 02:28 AM

சண்டிகர் : கன்னியாகுமரியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தியானம் செய்வதாக அறிவித்திருப்பதன் வாயிலாக, அவர் பிராயசித்தம் செய்ய உள்ளார் என ராஜ்யசபா எம்.பி., கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்தபின் பிரதமர் மோடி, இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார். அங்கு, கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் வரும் ஜூன் 1ம் தேதி மாலை வரை தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக ராஜ்ய சபா எம்.பி., கபில் சிபல் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ., எந்த சாதனைகளும் செய்யவில்லை. எனவே, தான் பா.ஜ., தலைவர்கள் தங்கள் பிரசாரங்களில் தாலி, ஓட்டு ஜிஹாத், முஜ்ரா பாரம்பரிய நடனம் போன்ற விவகாரங்களையும், எதிர்க்கட்சியினரையும் விமர்சித்து வருகின்றனர்.
ஆட்சிக்கு வரும் முன் பிரதமர் மோடி, 60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் செய்யாததை தாங்கள் 60 மாதங்களில் செய்வோம் எனவும், புதிய இந்தியா அமைப்போம் எனவும் குறிப்பிட்டார். ஆனால், 120 மாதங்கள் ஆட்சி செய்தும் புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
நம் நாட்டு மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பல்வேறு நாடுகளில் கல்விக்கு 9 முதல் 12 சதவீதம் வரை ஒதுக்கப்படுகிறது. நம் நாட்டில் அது, வெறும் 4 சதவீதம் மட்டுமே ஆட்சியாளர்கள் ஒதுக்குகின்றனர். இதுதவிர, 25 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் 46 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
இதற்கிடையே, பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு எல்லாம் பிராயசித்தம் செய்யும் வகையில், அவர் இதை மேற்கொண்டால் நல்லது; அவ்வாறு இல்லை எனில் சுவாமி விவேகானந்தரின் எழுத்து மற்றும் பேச்சால் கவரப்பட்டு, தியானம் மேற்கொண்டாலும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.