உடைந்தது சத்ரபதி சிவாஜி சிலை: மனம் உடைந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி
உடைந்தது சத்ரபதி சிவாஜி சிலை: மனம் உடைந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி
UPDATED : ஆக 30, 2024 05:01 PM
ADDED : ஆக 30, 2024 04:06 PM

மும்பை: பலத்த காற்றில் 35 அடி உயர மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தததற்காக, தலை வணங்கி மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா சென்றுள்ள பிரதமர் மோடி, பல்கார் பகுதியில் ரூ.76,000 கோடி மதிப்பிலான வத்வான் துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது இந்தியாவின் பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக அமைய உள்ளது.
திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய தாயின் மகனான சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல. சிவாஜி எனக்கு கடவுள் போன்றவர். காற்று, மழையில் சிலை சேதமடைந்ததற்கு எனது கடவுள் சிவாஜியிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மண்ணின் மைந்தரான சாவர்க்கரை அவமதித்த சிலர் (காங்கிரசார்), அதற்காக மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு இன்று முக்கியமான நாள். இது கடந்த 10 ஆண்டுகளாக இருந்தாலும் சரி, இப்போது எனது அரசின் மூன்றாவது முறையாக இருந்தாலும் சரி, பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் வளர்ச்சிக்குத் தேவையான சக்தியும் வளங்களும் உள்ளன. இன்று ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பில் வத்வான் துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
மஹாராஷ்டிராவின் ராஜ்கோட் கோட்டையில் கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த, 35 அடி உயர மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை, சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்திருந்தது.

