ADDED : ஜன 19, 2024 01:05 AM
புதுடில்லி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான நியமங்களை பின்பற்றி வருகிறார். தரையில் உறங்கும் அவர், இளநீர் மட்டுமே குடிக்கிறார்.
பிரதிஷ்டை
ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 22ம் தேதி நடக்க உள்ளது. பிராண பிரதிஷ்டை என்பது, ஒரு சிலைக்குள் கடவுளை அழைக்கும் நிகழ்வாகும்.
பல பூஜைகள், அனுஷ்டானங்கள் செய்து, கடவுள் உருவச் சிலைக்குள் தெய்வீகத்தை அழைப்பதே இதன் அடிப்படையாகும்.
இதன்படி, ராமர் கோவிலில் நடக்கும் பிராண பிரதிஷ்டையை, பிரதமர் மோடி, வரும், 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு செய்ய உள்ளார்.
இதற்காக, கர்ப்ப கிரகத்தில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் வைபவம் நேற்று நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிராண பிரதிஷ்டையில் பங்கேற்பதால், பிரதமர் மோடி, சிறப்பு நியமங்களை மேற்கொண்டு வருகிறார்.
சிறப்பு உபவாசம்
யாகங்கள் துவங்கிய நாளில் இருந்து, 11நாட்களுக்கும் அவர் சிறப்பு உபவாசத்தில் இருந்து வருகிறார். இதன்படி அவர், தரையிலேயே உறங்குகிறார். உணவு வகைகளை தவிர்த்து, இளநீர் மட்டுமே குடித்து வருகிறார் என, தகவல்வெளியாகி உள்ளது.
பல பணிகள் இருந்தபோதும், இந்த கடினமாக நியமங்களை அவர் மிகுந்த சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறார்.
இந்த உபவாசங்கள், நியமங்கள், தவம், ஒருவருடைய மனம் மற்றும் உடலை துாய்மைப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நியமங்களின்படி, சாத்வீகமான உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது, வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பல நியமங்கள் உள்ளன. ஆனால், வெறும் இளநீர் மட்டும் குடித்து, மிகக் கடுமையான தவத்தில் பிரதமர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

