இனிய நண்பர், அற்புதமானவர்; விஜயகாந்தை புகழ்ந்த பிரதமர் மோடி
இனிய நண்பர், அற்புதமானவர்; விஜயகாந்தை புகழ்ந்த பிரதமர் மோடி
ADDED : ஏப் 14, 2025 10:12 PM

புதுடில்லி: எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலை மையம் கொண்டு அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை ஆரம்பித்துள்ளன. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. இப்படி ஒரு சூழலில் விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று பிரதமர் அழைப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று (ஏப்.14) கூறினார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந் நிலையில், பிரமேலதாவின் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். தமது எக்ஸ் வலை தளத்தில் பிரேமலதாவின் பதிவை இணைத்து, விஜயகாந்தை புகழ்ந்துள்ளார். அவர் தனது பதிவை தமிழில் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது;
எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்.
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

