ADDED : மார் 13, 2026 07:54 AM
புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், நம் பிரதமர் மோடி நேற்றிரவு ஈரான் அதிபர் மசூத் பெெஷஸ்கியானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தார்.
மேற்காசியாவில் போர் பதற்றம் நீடித்து வருவது, பல்வேறு உலக நாடுகளையும் பாதித்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்றிரவு ஈரான் அதிபர் மசூத் பெெஷஸ்கியா னுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அங்கு நிலவும் போர் பதற்றம், பொதுமக்களுக்காக எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
குறிப்பாக, ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டார். கச்சா எண்ணெய் மற்றும் சரக்குகள் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.
ஈரான் அதிபருடன் நடத்திய பேச்சு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
ஈரான் அதிபர் மசூத் பெெஷஸ்கியானுடன் நடத்திய பேச்சின்போது, அந்த பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.
உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து என் கவலையை தெரிவித்தேன். மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா எப்போதும் தோள் கொடுக்கும். இருதரப்பு பேச்சுகள் மூலமே பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

