அனைத்து பிரச்னைக்கும் பேச்சு மூலம் தீர்வு: ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
அனைத்து பிரச்னைக்கும் பேச்சு மூலம் தீர்வு: ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
UPDATED : ஆக 31, 2026 08:26 PM
ADDED : ஆக 31, 2026 08:20 PM

பிஷ்கெக்: “மேற்காசியா பிராந்தியத்தில் நிலவும் அனைத்து பிரச்னைக்கும் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும்,'' என, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் நடந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக, பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலாவதாக, உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவுசெய்த அவர், அதன்பின் கிர்கிஸ்தானுக்கு நேற்று முன்தினம் சென்றார். அந்நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும், 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மேற்காசிய நாடான ஈரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியானை, பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது, மேற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சிகளின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். இரு தலைவர்களும் மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர்.
மேற்காசிய பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என்ற நம் நாட்டின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். கடல்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், எந்தச் சூழலிலும் வணிக கப்பல்கள் மற்றும் மாலுமிகள் பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார்.
கடந்த பிப்ரவரியில், ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தரப்பில் போர் நடவடிக்கைகள் தொடங்கியபின், பிரதமர் மோடியும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கும் இடையே நடந்த முதல் நேரடி சந்திப்பு இது.
இந்தச் சந்திப்பு குறித்து சமூக ஊடகத்தில் பிரதமர் மோடி கூறுகையில், 'மேற்காசிய பிராந்தியத்தில், நீடித்த அமைதியை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். வருங்காலத்தில், இருதரப்பு வர்த்தக உறவை விரிவுப்படுத்த விரும்புகிறோம்' என, குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி, மற்றொரு மேற்காசிய நாடான ஆர்மீனியப் பிரதமர் நிகோல் பாஷினியானை சந்தித்து பேசினார். அப்போது பாதுகாப்பு, பொருளாதாரம், மருந்துகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
