100 நாள் வேலை திட்டத்தில் பிரதமர் மோடியின் நோக்கம்: ராகுல் கண்டுபிடிப்பு
100 நாள் வேலை திட்டத்தில் பிரதமர் மோடியின் நோக்கம்: ராகுல் கண்டுபிடிப்பு
UPDATED : ஜன 27, 2026 03:17 PM
ADDED : ஜன 27, 2026 03:13 PM

புதுடில்லி : மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அழிப்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில்(MGREGA) மத்திய அரசு பல மாற்றங்களை செய்து பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட விபி ஜிராம்ஜி மசோதா நிறைவேறி சட்டமாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அழிக்கும் பிரதமர் மோடியின் நோக்கத்தின் பின்னணியில் உள்ள காரணம் என்ன?
* தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை நிர்ணயிக்கும் உரிமையை பறிப்பது
* பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை பறித்து அவர்களின் கைகளை கட்டிப் போடுவது
* மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து , டில்லியில் குவிப்பது.
* அனைத்து அதிகாரங்களும், செல்வமும் ஒரு சிலரின் கைகளில் குவிந்திருந்த மன்னர்கள் மற்றும் மகாராஜாக்களின் காலத்திற்கு நாட்டை பின்னோக்கித் தள்ளுவது
குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலைக்கான உத்தரவாதம், சுதந்திரத்துடனும் கண்ணியத்துடனும் வேலை செய்வதற்கான உரிமை இவற்றைத் தான் நாட்டின் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே குரலில் '' மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எங்களின் வாழ்க்கையை மாற்றியது,'' என உரக்கக்கூறினர். இந்த மாற்றத்தைக் கொண்டு வர பல தசாப்தங்கள் ஆனது.
இன்று அதே தொழிலாளர்கள், தங்களை மோடி அரசு அடிமைப்படுத்துகிறது என்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

