பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும்: டில்லி ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில்
பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும்: டில்லி ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில்
ADDED : டிச 04, 2025 12:20 PM

புதுடில்லி: இருதரப்புக்கு இடையே பிரச்னை நீடித்தால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும் என டில்லி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையின் போது தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பா.ம.க., தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும் என, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோர் அளித்த மனுவை, தலைமை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது.அதேநேரம், பா.ம.க., தலைவராக, வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. அதனால், பா.ம.க., பெயர், கொடி, சின்னம் ஆகியவை, அன்புமணி தலைமையிலான கட்சிக்கு சொந்தமாகியுள்ளன.
இதை எதிர்த்து, ராமதாஸ் தரப்பில், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (டிச.,04) விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருதரப்பு தனது வாதங்களை முன்வைத்தது. இதற்கு பதில் அளித்து தேர்தல் கமிஷன் கூறியதாவது:
பாமகவில் தலைமை பிரச்னை உருவாகி உள்ளது. அதனால் சின்னம் ஒதுக்க முடியாது. அன்புமணிக்கோ, ராமதாஸ் தரப்புக்கோ பாமக சின்னத்தை ஒதுக்க முடியாது. இருதரப்புக்கு இடையே பிரச்னை நீடித்தால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும்.
இருதரப்பும் பிரச்னைக்குரியதாக இருந்தால் தேர்தல் கமிஷன் படிவம் ஏ மற்றும் படிவம் பி.,யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல் சின்னமும் முடக்கி வைக்கப்படும். விண்ணப்பங்களில் இரண்டு தரப்புமே பிரச்னை முடியும் வரை கையொப்பமிட்டு தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிப்பது ஏற்க முடியாது.
எனவே கட்சியின் சின்னத்தை முடக்கி வைப்பது தான் ஒரே வழியாக இருக்கும். எங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தான் அன்புமணி பாமக தலைவராக ஏற்கிறோம். இதில் பிரச்னை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

