ADDED : ஆக 14, 2011 03:16 PM
புதுடில்லி: உண்ணாவிரதம் இருக்க சட்டப்பூர்வமாக அணுக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு எழுதிய பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா வலியுறுத்தி வரும் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இதற்காக ஜெய்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் அனுமதி வழங்கியுள்ள டில்லி போலீசார் 3 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். 5 ஆயிரம் பேர்களுக்கு மேல் உண்ணாவிரத மேடையில் இருக்கக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இதனை ஏற்க மறுத்த ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர், அமைதியான போராட்டத்துக்கு அனுமதி மறுப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு நசுக்கி அடக்குகிறது. போலீசாரின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என கூறியிருந்தார். இந்த கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், உண்ணாவிரதம் இருக்க டில்லி போலீசார் வழங்கிய அனுமதியை கொடுத்தது சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தான். இநத விவகாரத்தில் நீங்கள் சட்டப்பூர்வமாக அணுக வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகம் எந்த விதத்திலும் தலையிடவில்லை என கூறியுள்ளார்.