உ.பி.,யில் வன்முறைக்கு காரணமான ஐந்து பேரை சுட்டுப்பிடித்த போலீசார்
உ.பி.,யில் வன்முறைக்கு காரணமான ஐந்து பேரை சுட்டுப்பிடித்த போலீசார்
ADDED : அக் 17, 2024 11:39 PM

பஹ்ரைச் :உத்தர பிரதேசத்தில் துர்கை சிலை ஊர்வலத்தின் போது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டு வன்முறை சம்பவம் ஏற்பட காரணமாக இருந்த ஐந்து பேரை, என்கவுன்டர் நடத்தி போலீசார் நேற்று கைது செய்தனர்; இதில் இருவர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேசத்தில் துர்கா பூஜையை ஒட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரமாண்ட துர்கை சிலைகள், கடந்த 13ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
அப்போது, பஹ்ரைச் மாவட்டத்தில் மஹாசி என்ற பகுதியில் சிலைகளை எடுத்துச் செல்லும் போது, ஒலிபெருக்கி சத்தத்தை குறைப்பது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது.
கூட்டத்தில் இருந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ரெஹுவாமன்சூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்கோபால் மிஷ்ரா, 22, என்ற இளைஞர் உயிரிழந்தார்; 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில், மஹாசியில் இருந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில், ராம்கோபால் கொலைக்கும், வன்முறை சம்பவத்துக்கும் காரணமான பஹ்ரைசைச் சேர்ந்த முகமது பஹீன் மற்றும் முகமது தலீம் ஆகியோரை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இருவர் அளித்த தகவலைத் தொடர்ந்து, அவர்களின் கூட்டாளிகளான முகமது சர்பராஸ், அப்துல் ஹமீது, முகமது அப்சல் ஆகியோரை தேடி நன்பாரா பகுதிக்கு போலீசார் சென்றனர். ஏற்கனவே கைது செய்த இருவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பிய பஹீன், தலீம் ஆகியோர், மீதமுள்ள மூவருடன் சேர்ந்து தப்ப முயன்றனர். போலீசார் மீது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு, போலீசார் சுட்டதில் முகமது பஹீன் மற்றும் முகமது தலீம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர்கள் அண்டை நாடான நேபாளத்திற்கு தப்ப முயன்றது தெரியவந்தது.
காயமடைந்த இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ராம்கோபால் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.