தசரா துவக்க விழாவில் அரசியல் பா.ஜ., விஸ்வநாத் கண்டனம்
தசரா துவக்க விழாவில் அரசியல் பா.ஜ., விஸ்வநாத் கண்டனம்
ADDED : அக் 05, 2024 04:59 AM

மைசூரு: ''சிலரின் தேவையற்ற உரை மற்றும் அரசியல் காரணமாக, சாமுண்டீஸ்வரி கோவிலில் நடந்த மைசூரு தசரா துவக்க விழாவின் புனிதம் பாழாகிவிட்டது,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றம்சாட்டினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மைசூரு தசரா துவக்க விழா மேடை, அரசியல் மேடை அல்ல. நிகழ்ச்சியை துவக்கி வைத்த இலக்கியவாதி நாகராஜய்யா, அரசியல் உரையாற்றியுள்ளார். தசரா வரலாறு, மஹாராஜாக்களின் பங்களிப்பு குறித்து பேசாமல், கீழ்த்தரமான வேலையை சில அரசியல்வாதிகள் செய்துள்ளனர்.
சிலரின் தேவையற்ற உரை மற்றும் அரசியல் காரணமாக, சாமுண்டீஸ்வரி கோவிலில் நடந்த மைசூரு தசரா துவக்க விழாவின் புனிதம் பாழாகிவிட்டது.
இதற்கு முன்பு சாமுண்டீஸ்வரி குறித்து, அலட்சியமாக பேசி வந்த முதல்வர் சித்தராமையா, இப்போது சாமுண்டீஸ்வரியின் ஆசியை கேட்கிறார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்கிறார். இதன் அர்த்தம் என்ன?
ம.ஜ.த., ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் ஜி.டி.தேவகவுடா, முதல்வர் சித்தராமையாவை புகழ்ந்தது நாடகம். ஜி.டி.தேவகவுடாவும் கூட, 'முடா' பயனாளிதான். இவர் இவ்வளவு புகழ வேண்டிய அவசியம் இல்லை. முடா ஊழல் குறித்து இதுவரை வாய் திறக்காத இவர், இப்போது ஏன் பேசுகிறார்?
அனைத்து அரசியல்வாதிகளும் சேர்ந்து, மைசூரை கொள்ளையர்களின் சந்தை போன்று ஆக்குகின்றனர். தன்னை ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் குழுத்தலைவர் பதவியில் அமர்த்தாததால், ஜி.டி.தேவகவுடா கோபத்தில் இருக்கிறார்.
காங்கிரஸ் அரசை கவிழ்ப்போம் என, யாரும் கூறவில்லை. ஆனால் முதல்வரே, இது போன்ற புரளியை கிளப்புகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.