புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்களாக பா.ஜ.,வினர் 3 பேர் நியமனம்
புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்களாக பா.ஜ.,வினர் 3 பேர் நியமனம்
ADDED : ஜூலை 11, 2025 06:15 PM

புதுடில்லி: புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.,க்களாக பா.ஜ.,வைச் சேர்ந்த 3 பேரை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் புதுச்சேரி தலைவரான ரங்கசாமி முதல்வராக உள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டன. நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவியும் பா.ஜ.,வினர் 3 பேருக்கு வழங்கப்பட்டன.
இந் நிலையில் புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் ராஜினாமா செய்ய பா.ஜ., உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, பா.ஜ., மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் ஜூலை 15ம் தேதி சட்டசபையில் பதவி ஏற்பார்கள் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.