ADDED : அக் 05, 2025 12:05 AM
சுராசந்த்பூர்: மணிப்பூரின் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, இங்குள்ள சுராசந்த்பூரில் நிறுத்தப்பட்ட தபால் சேவை இரண்டு ஆண்டுக்கு பின் நேற்று மீண்டும் துவங்கியது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக, கூகி - மெய்டி சமூகத்தினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து நடந்த கலவரத்தில், 260 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்தனர்.
கலவரம் காரணமாக இங்குள்ள சுராசந்த்பூரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தபால் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் சுராசந்த்பூர் மாவட்டத்தில் தபால் சேவை துவங்கியது.
இதையொட்டி நேற்று காலை, மாவட்ட தலைமையகமான சுராசந்த்பூருக்கு தபால்கள் ஏற்றிய வாகனம் வந்தது. அதில் இருந்த கடிதங்கள், பார்சல்கள் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் இறக்கி வைத்தனர். இதையடுத்து தலைநகர் இம்பாலுக்கு அந்த வாகனம் புறப்பட்டுச் சென்றது.
தபால் சேவை துவங்கியதன் வாயிலாக, அந்த பிராந்தியத்தில் வழக்கமான தகவல் தொடர்பு சேவை புத்துயிர் பெற்றுள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.