ஓட்டு போட எம்.பி.,க்களுக்கு பயிற்சி; துணை ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்
ஓட்டு போட எம்.பி.,க்களுக்கு பயிற்சி; துணை ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்
ADDED : செப் 09, 2025 12:34 AM

இன்று நடக்கவுள்ள துணை ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவின்போது, என்னென்ன விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும், எவ்வாறு ஓட்டுப்போட வேண்டும் என்பது குறித்து, அனைத்து எம்.பி.,க்களுக்கும் மாதிரி ஓட்டுப்பதிவு வாயிலாக நேற்று விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.
துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை ராஜ்யசபா செயலக அதிகாரிகள் செய்துள்ளனர்.
சிறப்பு பாதை
ஓட்டுப்பதிவு நடக்கஉள்ள பார்லிமென்ட்டின் முதல் தளத்தில் உள்ள, வசுதா அரங்கிற்கு, தரைதளத்தில் உள்ள மகர் துவார், ஷ்ரதுல் துவார் வாயில்கள் வழியாக, எம்.பி.,க்கள் உள்ளே செல்வதற்கு சிறப்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்போட செல்லும் எம்.பி.,க்கள் தங்கள், 'மொபைல் போன்'களை வாயிலில் சமர்ப்பித்து, 'டோக் கன்' பெற்றுக் கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவர்.
நீள்வாக்கில் அமைந்த அறை எண், 'எப் - 101' என்ற பெரிய ஹாலின் வலதுபுறம், நான்கு மேஜைகள் மற்றும் இருக்கைகள் போடப் பட்டுள்ளன.
அதில், முதல் இருக்கையில் தேர்தல் அதிகாரி, 2வது, 3வது இருக்கைகளில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கான முகவர்களும், 4வது இருக்கையில் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும் அமர்ந்திருப்பர்.
இதற்கு எதிராக, இடப்புறத்தில், ஆறு மேஜைகள் மற்றும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதில், தேர்தல் அலுவலர்கள் அமர்ந்து, ஓட்டுப்போட வரும் எம்.பி.,க்களுக்கு உதவி செய்வர்.
இந்த இரு வரிசைகளை தாண்டி, வலதுபுறம் 3, இடதுபுறம் 3 என, மொத்தம் அறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குபோய், எம்.பி.,க்கள் ஓட்டுகளை ரகசியமாக பதிவு செய்ய வேண்டும்.
விளக்கம்
இதில் இரு அறைகள் மட்டும் சற்று விசாலமாக உள்ளன. சக்கர நாற்காலியில் வரும் எம்.பி.,க்களுக்காக, இந்த அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாதிரி ஓட்டுப்பதிவு வாயிலாக அனைத்து எம்.பி.,க்களுக்கும் நேற்று சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. சம்விதான் சதன் என்றழைக்கப்படும், பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மைய மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில், 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் பலரும் பங்கேற்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களுக்கு, பார்லிமென்ட் நுாலக அரங்கில் உள்ள பாலயோகி அரங்கில், மாதிரி ஓட்டுப்பதிவு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, எப்படி ஓட்டுப்போட வேண்டுமென்பதை எம்.பி.,க்களுக்கு விளக்கியதோடு, அவர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் ராஜ்யசபா தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பதில் அளித்தனர்.
-நமது டில்லி நிருபர்-