நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாவுக்கு பத்ம விருது வழங்கினார் ஜனாதிபதி
நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாவுக்கு பத்ம விருது வழங்கினார் ஜனாதிபதி
ADDED : மே 28, 2025 05:33 AM
புதுடில்லி : ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
கலை, சமூகப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, 'பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ' ஆகிய நாட்டின் உயரிய விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
நடப்பு, 2025க்கான விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டன. இதன்படி, 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதி, நடிகர் அஜித் குமார் உட்பட, 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஏப்., 28ல், நடந்த விழாவில், 71 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகள் வழங்கினார்.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் இரண்டாவது கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹருக்கு, பத்ம விபூஷண் விருது வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழகத்தைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார்.
பிரபல நடிகை ஷோபனா பத்ம பூஷண் விருதை பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குருவாயூர் துரை ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றிய பொருளாதார வல்லுநர் பிபேக் டெப்ராய்க்கு, இறப்புக்கு பின், பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இதை அவரது மனைவி பெற்றார்.