UPDATED : பிப் 13, 2025 08:33 PM
ADDED : பிப் 13, 2025 07:37 PM

புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி - கூகி பிரிவினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பைரேன் சிங், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, முதல்வர் பதவியை பா.ஜ., மூத்த தலைவர் பைரேன் சிங், 64, ராஜினாமா செய்தார். இதை ஏற்ற கவர்னர் அஜய் குமார் பல்லா ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அரசியலமைப்பின் 356வது பிரிவின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்து உள்ளார்.
ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் '' கவர்னர் அஜய் பல்லாவிடம் வந்த அறிக்கை மற்றும் கிடைத்த தகவல்களை தீவிரமாக பரிசீலனை செய்ததில், இந்திய அரசியலமைப்பின்படி அந்த மாநிலத்தில் அரசை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்பதில் ஜனாதிபதி திருப்தி அடைந்துள்ளார்,'' எனக்கூறப்பட்டு உள்ளது.
1951ல் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவது இது முதல்முறை ஆகும்.

