ஜனாதிபதியின் உரையில் தொலைநோக்கு பார்வை இல்லை: கார்கே பேச்சு
ஜனாதிபதியின் உரையில் தொலைநோக்கு பார்வை இல்லை: கார்கே பேச்சு
ADDED : ஜூலை 01, 2024 12:38 PM

புதுடில்லி: 'ஜனாதிபதியின் உரையில் தொலைநோக்கு பார்வையோ, வழிகாட்டுதலோ இல்லை' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராஜ்யசபாவில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: ஜனாதிபதியின் உரை என்பது மிகவும் முக்கியமானது. ஜனாதிபதி திரவுபதி முர்முவை மதிக்கிறோம். இந்த ஆண்டு, பார்லிமென்டில் இரண்டு முறை ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். முதல் முறை ஆற்றிய உரை தேர்தலுக்கானது.
ஜனாதிபதி உரையில், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதகமாக எந்த திட்டமும் இடம்பெறவில்லை. ஜனாதிபதியின் உரையில் தொலைநோக்கு பார்வையோ, வழிகாட்டுதலோ இல்லை. கடந்த முறை போலவே, இந்த முறையும் மத்திய அரசை பாராட்டும் வார்த்தைகள் ஜனாதிபதி உரையில் அதிகம் இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
காந்தி, அம்பேத்கர் சிலைகளை நிறுவுக
பார்லி., வளாகத்தில் இருந்த காந்தி, அம்பேத்கர் சிலையை அகற்றியது தொடர்பாக, ராஜ்யசபாவில் கார்கே பேசியதாவது: பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட காந்தி, அம்பேத்கர் சிலைகளை மீண்டும் பழைய இடத்தில் நிறுவ வேண்டும்.
இது போன்ற விவகாரங்களில் முடிவு எடுக்கும் முன், எதிர்க்கட்சித் தலைவரை உள்ளடக்கிய கமிட்டியிடம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் அரசு ஆலோசனை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.