நேர்மையான 'ஸ்டிங்' ஆபரேஷன்களுக்காக பத்திரிகைகள் மீது வழக்குத் தொடர முடியாது: கேரள உயர்நீதிமன்றம்
நேர்மையான 'ஸ்டிங்' ஆபரேஷன்களுக்காக பத்திரிகைகள் மீது வழக்குத் தொடர முடியாது: கேரள உயர்நீதிமன்றம்
ADDED : ஜூலை 17, 2024 06:03 AM

எர்ணாகுளம்: கேரளாவில் சோலார் ஊழல் வழக்கு தொடர்பாக ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய இரண்டு பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை கேரள உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது.
இவ்வழக்கின் தீர்ப்பில் நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் கூறியதாவது:
அரசின் பணி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை மக்களுக்கு அறியச்செய்யும் கடமை பத்திரிகைகளுக்கு உள்ளது. அதில் சில நேரங்களில் மக்களுக்கு உண்மையை தெரிவிப்பதற்காக பத்திரிகைகள் சட்டத்தின் எல்லையை மங்கச் செய்ய வேண்டியுள்ளது.
ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நான்காவது தூணான பத்திரிகைகள் மிகவும் அவசியமானது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் மக்கள் தங்கள் ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபட பத்திரிகைகள் உறுதி செய்து பணியாற்ற வேண்டும். இதனை பத்திரிகைகள் பின்பற்றுகிறதா என்பது வேறு விஷயம். உண்மை வெளிக்கொணர பத்திரிகைகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஸ்டிங் ஆபரேஷன். பொதுவாக இது சட்டத்தின்படி அனுமதிக்கப்படாத ஒன்றாகும்.
இருப்பினும் பத்திகைகளால் நடத்தப்படும் இத்தகைய ஸ்டிங் ஆப்பரேஷன்கள் சட்டப்படியானதா என்பதை வழக்கு அடிப்படயைில் முடிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வழக்கின்படி இரு பத்திரிகையாளர்களும் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில், இரண்டு பத்திரிகையாளர்களும் சிறைக்குள் நுழைவதற்கு முன் அனுமதி பெற்றதாகவும், சாட்சியை பதிவு செய்ய முயன்றபோது, சிறை அதிகாரிகளால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை நீதிமன்றம் அறிகிறது.
எனவே, மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்வது பொருத்தமானது என நீதிமன்றம் கருதுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பின்போது கூறினார்.