நாட்டின் விரைவான வளர்ச்சி எப்போது ? பிரதமர் மோடி விளக்குகிறார்
நாட்டின் விரைவான வளர்ச்சி எப்போது ? பிரதமர் மோடி விளக்குகிறார்
ADDED : மார் 10, 2024 01:41 PM

அசம்கார்க்: ‛‛ முந்தைய ஆட்சியாளர்கள் தேர்தலுக்காக திட்டங்களை அறிவித்தனர். பிறகு அவர்கள் திட்டமும், அவர்களும் காணாமல் போய்விட்டன '' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
உ.பி., மாநிலம் அசம்கார்க்கில் நடந்த அரசு விழாவில் பல்வேறு நடத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில நாட்களாக, புதிய விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், ஐஐஎம்கள், எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கி வைப்பதை அறிந்த மக்கள் ஆச்சர்யம் அடைகிறார்கள். சிலர் தேர்தல் நேரம் வருவதால் அனைத்தும் துவக்கி வைக்கப்படுவதாக எண்ணுகின்றனர்.
முந்தைய தேர்தல் காலத்தில் என்ன நடந்தது. முந்தைய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்ற திட்டங்களை அறிவித்தனர். 30 - 35 ஆண்டுகளுக்கு முன்பு, திட்டங்களுக்கான பதாகைகளை வைப்பார்கள். பிறகு, அதுவும், அறிவித்தவர்களும் காணாமல் போய் விடுவார்கள். 2047 க்குள் வளர்ந்த இந்தியா என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாட்டை முழு வேகத்துடன் நடத்தி வருகிறேன்.
நாட்டில் தற்போது நடந்து வரும் நகரமயமாக்கம் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டியது. ஆனால், இதனை நாங்கள் வாய்ப்பாக செயல்படுத்தி வருகிறோம். உ.பி., மாநிலம் வளர்வதன் மூலம் சமரச அரசியல் என்ற விஷம் பலவீனம் அடைந்து வருகிறது. அரசு சரியான நோக்கத்துடனும், நேர்மையுடனும் செயல்படும் போதுதான் விரைவான வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

