ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஒடிசாவில் துவக்கினார் பிரதமர் மோடி
ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஒடிசாவில் துவக்கினார் பிரதமர் மோடி
ADDED : பிப் 04, 2024 12:36 AM

சம்பல்புர்: முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ள ஒடிசாவில், 68,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
புதிய வேலைவாய்ப்பு
ஒடிசாவில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின், 27,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தாலாபிரா மின் உற்பத்தி திட்டம் உட்பட, ஒடிசாவில், 68,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நேற்று துவக்கி வைக்கப்பட்டன.
ரயில்வே, நெடுஞ்சாலைகள், மின்சார உற்பத்தி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். மேலும், சம்பல்புரில், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை மையத்தின் புதிய வளாகம் உள்ளிட்டவையும் துவக்கி வைக்கப்பட்டன.
இவற்றை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
இங்கு துவக்கி வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் வாயிலாக, ஒடிசாவில் மிகப்பெரிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்பட உள்ளன. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
வளர்ந்த பாரதம் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால்தான், இது சாத்தியமாகும். இந்த ஒவ்வொரு திட்டங்களும், இளைஞர்களுக்கு பெரிதும் உதவும். அவர்களுக்கு பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாற்றங்கள்
முதல்வர் நவின் பட்நாயக், கவர்னர் ரகுபர் தாஸ், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிஸ்வேஸ்வர் துடு, அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான அசாமில், 11,600 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணத்தை பிரதமர் மேற்கொண்டுள்ளார். இதன்படி, நேற்று மாலை அவர் குவஹாத்தி சென்றடைந்தார்.
காமாக்யா கோவிலில் புதிய பாதை, நெடுஞ்சாலை திட்டங்கள் உள்ளிட்டவற்றை அவர் துவக்கி வைக்க உள்ளார்.
இதற்கிடையே, காமன்வெல்த் நாடுகளின் சட்டக் கல்வி சங்கம் சார்பில், காமன்வெல்த் அட்டர்னி மற்றும் சொலிசிட்டார் ஜெனரல் மாநாடு புதுடில்லியில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ''நீதி வழங்குதல் முறையில், புதிய நவீன தொழில்நுட்பங்கள், புதிய மாற்றங்கள் செய்வது தொடர்பாக, நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை,'' என, வலியுறுத்தினார்.