மாணவர்களால் ஆசிரியர்கள் சோர்வு; தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வருத்தம்
மாணவர்களால் ஆசிரியர்கள் சோர்வு; தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வருத்தம்
ADDED : நவ 28, 2024 12:37 AM
பெங்களூரு : 'மாணவர்களுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் அறிவுரை கூட சொல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், பல ஆசிரியர்கள் சோர்வு அடைந்துள்ளனர்' என, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சசிகுமார் அரசுக்கு தெரிவித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையாவுக்கு 'கேம்ஸ்' தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சசிகுமார் எழுதிய கடிதம்:
பள்ளிகளில் தரமான கல்வியை அளிப்பது கடமை ஆசிரியர்கள் என பணியாற்றுகின்றனர். சமீப காலமாக பெரும்பாலான மாணவ - மாணவியர், ஆசிரியர்களின் பேச்சை சரிவர கேட்பதில்லை. ஆசிரியர்களை வார்த்தைகளால் துன்பப்படுத்துவது அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் குறைந்தபட்ச ஒழுங்குவிதிகளை அமல்படுத்த வேண்டும்.
பள்ளிக்கு வருவதில் மாணவர்கள் ஒழுக்கமின்மை, ஆசிரிய - ஆசிரியைகளை மதிப்பதில்லை; பள்ளி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசுவது என்பது உள்ளிட்ட குறைபாடுகள் நிகழ்கின்றன. இதற்கு உடனே அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மாணவ - மாணவியருக்கு பாதிப்பு வராமலும், அவர்கள் கல்வி பாதிக்காமலும் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
சிறு சிறு காரணங்கள் என்றாலும், மாணவ - மாணவியருக்கு பிரச்னை எனக்கூறி, குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணைக்கு வருகின்றனர். கல்வித்துறையின் கடுமையான விதிகளால் பெற்றோர், ஆசிரியர்களுக்கு சுதந்திரமில்லை.
தனியார் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு அறிவுரை கூட சொல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது; பல ஆசிரியர்கள் சோர்வடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாக குழுக்கள் ஒழுங்கு நடவடிக்கையை அமல்படுத்தவும், மாணவர்களை கட்டுப்படுத்த கல்விச் சூழலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற கடிதம், மாநில கல்வி அமைச்சர் மது பங்காரப்பாவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது என, தனியார் பள்ளிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.