கட்டண நிர்ணய குழு அமைக்க தனியார் பள்ளிகளுக்கு அவகாசம்
கட்டண நிர்ணய குழு அமைக்க தனியார் பள்ளிகளுக்கு அவகாசம்
ADDED : பிப் 10, 2026 01:39 AM

புதுடில்லி: டில்லி தனியார் பள்ளிகளில், இன்றுக்குள் கட்டண ஒழுங்குமுறை குழு அமைக்க டில்லி அரசு பிறப்பித்த உத்தரவை, 20ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணய சட்டம் குறித்து, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து, பள்ளி அளவில் ஒழுங்குமுறை கட்டண குழுவை, 10ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என டில்லி அரசின் கல்வித் துறை, பிப்.,1ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
டில்லி அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, சிறுபான்மை பள்ளிகள் சங்கம், அனைவருக்கும் தரமான கல்விக்கான மேம்பாட்டு சங்கம் மற்றும் சுயநிதி அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் ஆகியவை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. அதில், பள்ளிகளில் கட்டண ஒழுங்குமுறை குழு அமைக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
டில்லி அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, “காலக்கெடுவை மேலும் நீட்டித்தால், வரும் கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை மார்ச் 27-க்குள் நிர்ணயிப்பதில் தாமதம் ஏற்படும்.
“வரும், 2026- - 2027 கல்வியாண்டு முதல் அடுத்த மூன்று கல்வி அமர்வுகளுக்கான கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகம், 25-ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும்.
“மேல்முறையீட்டுக் குழு மார்ச் 3-ம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும். புதிய கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்தபோது, ஜனவரி 8-ம் தேதியாக காலக்கெடு 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் கால நீட்டிப்பு கோர முடியாது,” என, வாதிட்டார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தனியார் பள்ளிகளில் கட்டண ஒழுங்குமுறை குழு அமைப்பதை நீட்டித்தால் அடுத்த கல்வி ஆண்டுக்கான பணிகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
வரும், 20ம் தேதி வரை, தனியார் பள்ளிகளில் குழு அமைக்க டில்லி அரசு வற்புறுத்தக் கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
டில்லி தனியார் பள்ளிகளில் பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறை குழுவில், பள்ளி நிர்வாக பிரதிநிதிகள், முதல்வர், மூன்று ஆசிரியர்கள், ஐந்து பெற்றோர் மற்றும் கல்வித் துறை பரிந்துரைக்கும் உறுப்பினர் ஆகியோர் இடம்பெறுவர்.
மேலும், பார்வையாளர்கள் முன்னிலையில் குலுக்கல் வாயிலாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
புதிய கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்து பல தனியார் பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

